அரசின் தவறான போக்கை மார்க்சிஸ்ட் தடுக்கும்: வரதராஜன்
குற்றாலம்:இசக்கிராஜன்
மக்கள் நலனுக்காக 2 லட்சம் மக்களைத் திரட்டி மாபெரும் பிரசாரப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் வந்த வரதராஜன் தட்ஸ்தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
திமுக அரசின் மக்கள் நலன் பயக்கும் திட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் திமுக அரசின் தவறான போக்கை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தடுத்து நிறுத்தும்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்து, ஜனநாயக முறைப்படி புதிய தேர்தலை நடத்த முதல்வர் உத்தரவிட்டதை வரவேற்கிறோம்.
ஆளும் அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு தவறான வழியில் சென்று விடக்கூடாது. தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மக்கள் நல இயக்கங்களின் ஆலோசனைகளை பெற்று செயல்பட வேண்டும். அதன்மூலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள், துயரங்களை தீர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீப காலமாக இந்த அரசின் அதிகாரங்கள் சீர்குலைந்து விட்டதாக கருதுகிறோம். இது குறித்து முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரில் பேசியுள்ளது.
கடந்த கால அதிமுக ஆட்சியில் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது. அந்த உரிமைகளை எல்லாம் காப்போம் என்று வாக்குறுதி கொடுத்து தான் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அந்த வாக்குறுதிகள் காக்கப்பட வேண்டும்.
மணல் கொள்ளை குறித்து போராட்டம் நடத்தி வருகிறோம். முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்துவதால் லாபம் அரசுக்கு வரும். மேலும் மெரீனா கடற்கரையில் பொதுக் கூட்டம், பேரணி நடத்த ஜெயலலிதா ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை உடேன நீக்க வேண்டும்.
ஆகஸ்ட் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து மறியல் நடத்தவுள்ளோம் என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications