மும்பை குண்டுவெடிப்பு: மேலும் ஒருவருக்கு தூக்கு24ம் தேதி சஞ்சய் தத் ஆஜராக உத்தரவு
மும்பை:மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று மேலும் ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரையும் சேர்த்து மொத்தம் 7 பேருக்கு இதுவரை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு மும்பை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தடா நீதிமன்றம் படிப்படியாக தண்டனை விவரத்தை அறிவித்து வருகிறது.
இவர்களில் 87 பேருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டது. அவர்களில் 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நேற்று மேலும் ஒருவருக்கு தூக்குத் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
முகம்மது இக்பால் முகம்மது யூசுப் ஷேக்குக்கு தூக்குத் தண்டனையை நீதிபதி பி.டி.கோடே அறிவித்தார். இவர் தவிர முன்னாள் சுங்கத்துறை கூடுதல் கலெக்டர் சோம்நாத் தபே, பஷீர் கைருல்லா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இன்னும் நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 13 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட வேண்டும். கடைசிக் கட்டமாக இவர்களுக்கு வருகிற 24ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications