மோதலில் 5 விடுதலைப் புலிகள் பலி:ராணுவத்துக்கு கடும் உயிர் சேதம்
கொழும்பு:இலங்கையின் மன்னார் பகுதியில் நடந்த சண்டையில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
இலங்கையின் வட மேற்கில் உள்ள மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்தது. விடிய விடிய நடந்த இந்த சண்டையில் ஐந்து விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
அதேசமயம், ராணுவத் தரப்பிலும் கடும் உயிர்ச் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை படையினர் இரு முனைத் தாக்குதலில் ஈடுபட்டனர். அவற்றை புலிகளின் முன்னெடுப்புப் பிரிவினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
புலிகள் தரப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இருப்பினும் ராணுவத்திற்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ராஜபக்ஷேவைக் கொல்ல குண்டு
இந் நிலையில் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ராணுவம் மீட்டதைக் கொண்டாட கொழும்பு அருகே விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இடத்துக்கு அருகே உள்ள டெல்கண்டா மார்க்கெட் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வாழைப்பழக் கூடையில் சக்தி வாய்ந்த குண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்புப் படையினர் இந்த குண்டைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.வெடிக்க 10 நிமிடங்கள் இருந்த நிலையில் அந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இந்தக் குண்டு வெடித்திருந்தால் பெரும் உயிரச் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications