பிரதமர் வீட்டு முன்பு போராட்டம்- அச்சுதானந்தன் மிரட்டல்
வயநாடு (கேரளா):வெள்ள நிவாரண நிதி தொடர்பாக கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்தால் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டு முன் போராட்டம் நடத்துவேன் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் மிரட்டியுள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பருவ மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத நிலவரங்களை நேரில் பார்க்க அங்கு வந்த அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு பெருமளவில் உதவி செய்ய வேண்டும் என கேரளா கோரியுள்ளது.
ஆனால் இந்தக் கோரிக்கை குறித்து மத்திய அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு கேரள அரசைத் தொடர்பு கொள்ளக் கூட இல்லை. இந்தப் போக்கு நீடித்தால், கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்களுடன் பிரதமர் இல்லம் முன்பு நான் போராட்டத்தில் குதிக்க வேண்டி வரும்.
வெள்ள நிவாரண நிதி தொடர்பாக கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. இது கண்டனத்துக்குரியது. சில மத்திய குழுக்கள் வந்து பார்த்துச் சென்றுள்ளன, அவ்வளவுதான். அதற்குப் பிறகு ஒன்றும் நடக்கவில்லை.
அணை கட்டாமல் விடமாட்டோம்:
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியேத் தீருவோம். கேரள மாநிலத்தில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 35 மக்களை காப்பாற்றுவதற்காகத் தான் நாங்கள் இந்த முயற்சியை எடுக்க உள்ளோம். தற்போதுள்ள அணை 111 ஆண்டுகள் பழமையானது.
அது மட்டுமல்லாது, தொடர்ந்து கேரளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அணையில் அதிகப்படியான நீர்வரத்தை இந்த பழமையான அணை தாங்காது. இந்த அணை எப்போது உடையும் என 4 மாவட்ட மக்களும் பயத்தில் இருக்கிறார்கள். ஏதாவது அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால் அதனுடைய விளைவு பயங்கரமானதாக இருக்கும்.
4 மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் நலன் கருதி கேரள அரசு, ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டுவதற்கு திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த தொகையை மாநில அரசே ஏற்று செயல்படுத்தும். இதற்காக மத்திய அரசின் உதவியை கோர மாட்டோம். நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் கேரள மக்களிடம் வசூலித்து திட்டத்தை முழுமையடையச் செய்வோம்.
புதிய அணை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டோம். நாங்கள் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் அச்சுதானந்தன்.












Click it and Unblock the Notifications