சேலம் ரயில்வே கோட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி:சேலத்தில் புதியதாக அமையவிருக்கும் ரயில்வே கோட்டத்திற்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
வரும் செப்டம்பர் 14ம் தேதி சேலத்தில் புதிய ரயில்வே கோட்டத்தை கருணாநிதி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கேரள அரசு சார்பாக, சேலம் ரயில்வே கோட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம்,
புதிதாக ஆரம்பிக்க இருக்கும் சேலம் கோட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
கேரளாவின் ஓவர் விவரம்:
கோவையிலிருந்து பயணம் செய்யும் பயணிகள் மூலமாகவும், சரக்கு வர்த்தகம் மற்றும் விளம்பரம் மூலமாகவும் பாலக்காடு கோட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.185 கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.
ஆனால் கடந்த 5 ஆண்டு காலமாக எந்தவொரு புதிய ரயிலையோ அல்லது வேறு எந்த திட்டத்தையோ இதுவரை பாலக்காடு கோட்டம் அறிவிக்கவில்லை.
அதே நேரத்தில் தமிழக ரயில்களை கேரளா வரை நீட்டித்து தமிழகத்தின் முதுகில் குத்தும் வேலைகளை பாலக்காடு கோட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர். பெங்களூரிலிருந்து கோவை வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சமீபத்தில் எர்ணாகுளம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
அதே போல ஜூலை 1 முதல் நாகர்கோவில்-கோவை இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு, இதுவரை இயக்கவில்லை. பெட்டி பற்றாக்குறை என்று கதை விட்டு வருகின்றனர் கேரள ரயில்வே அதிகாரிகள்.
போத்தனூர்-மதுரை இடையே இயங்கி வந்த ரயிலை அகல ரயில் பாதையாக மாற்றப் போகிறோம் என சொல்லி இதுவரை அமைக்கவில்லை.
கேரளத்தின் இந்த அராஜகத்துக்கு முடிவு கட்டவே சேலம் கோட்டம் அமைக்க ரயில்வே அமைச்சர் வேலு உத்தரவிட்டார். கோட்டம் அமைவது. ஆனால் ரயில்வேயில் உள்ள மலையாள உயரதிகாரிகள் அரசியல் கட்சியினரைத் தூண்டிவிட்டு இதற்கு முட்டுக் கட்டை போட முயன்று வருகின்றனர்.
வேலு-லாலு மீது கேரளா ஆத்திரம்:
இந் நிலையில் செப்டம்பர் 14ல் சேலம் கோட்டம் ஆரம்பிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை கேரள அரசு கடுமையாக எதிர்த்துள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில்,ரயில்வே துறை அமைச்சர் லாலு எங்களுக்கு கொடுத்த உறுதிமொழிக்கு எதிரானது இந்த திட்டம்.
இந்த பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் கலந்து பேசிய பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என லாலு ஏற்கனவே சொல்லியிருந்தார்.
ஆனால், தமிழகத்தின் ரயில்வேத் துறை இணை அமைச்சர் வேலுவின் நிர்பந்தத்திற்கு லாலு பணிந்து சாய்ந்து விட்டார் என்றார் அச்சுதானந்தன்.












Click it and Unblock the Notifications