இயக்குனர் கொலையில் நடிகை பல்டி
சென்னை:சினிமா இயக்குனர் செல்வா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சங்கீதா, சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி அந்தக் கொலையை தான் செய்யவில்லை என மறுத்து வாக்குமூலம் தந்துள்ளார்.
40 வயதான செல்வாவுக்கு மைதிலி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.பல திரைப்படங்களில் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வா, இயக்குநராக அவதாரம் எடுத்தார். கடந்த ஆண்டு காதோரம் போய் சொல், நினைவெல்லாம் நீயே என இரு படங்களுக்கு பூஜை போட்டார்.
நினைவெல்லாம் நீயே படத்தில் பிரவீன்குமார், ரியாஸ் ஆகிய புதுமுகங்கள் ஹீரோக்களாக நடித்து வந்தனர். சங்கீதா என்ற நடிகை ஹீரோயினாக நடித்து வந்தார்.
அப்போது செல்வாவுக்கும் சங்கீதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. செல்வாவின் அலுவலகத்திலேயே தங்க ஆரம்பித்தார் சங்கீதா.
இந் நிலையில் கடந்த மார்ச் மாதம் செல்வா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது அறையில் மது பாட்டில்களும் ஏராளமான ஆணுறைகளும் பெருமளவில் கிடந்தன.
இதையடுத்து கொலையை செய்ததாக நடிகை சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீஸாரிடம், கொலையை செய்ததை ஒப்புக் கொண்டார் சங்கீதா. அவர் கொடுத்த வாக்குமூலத்தில்,
நானும், செல்வாவும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தோம். தினமும் இரவு இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருப்போம். முன்பு எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார். பின்னர் அதை நிறுத்தி விட்டார். என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை தர ஆரம்பித்தார். இதனால் சண்டை ஏற்பட்டு வந்தது. அவரை விட்டு விலகி விடத் தீர்மானித்தேன்.
சம்பவத்தன்று மது அருந்தினோம். பின்னர் அவரது கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொன்றன் என்று வடபழனி போலீசாரிடம் கூறியிருந்தார் சங்கீதா.
இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக ைவத்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர் போலீசார். இதற்கிடையே வழக்கில் ஜாமீன் வாங்கிய சங்கீதா நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.
இந் நிலையில் இந்தக் கொலையில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கொலையான செல்வாவின் மனைவி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இது தொடர்பாக சங்கீதாவையும் அலுவலகத்துக்கு வரவழைத்து டி.எஸ்.பி. சந்திரபாசு விசாரணை நடத்தினார்.
அப்போது இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொலையான இயக்குனர் செல்வாவின் நண்பர்களிடம் விசாரித்தால் உண்மை தெரிய வரும் என்று பல்டி அடித்துள்ளார் சங்கீதா.












Click it and Unblock the Notifications