செப். 14ல் முக்கிய முடிவு!: விஜய்காந்த்
சென்னை:புதுக்கோட்டையில் வரும் செப்டம்பர் 14ம் தேதி நடக்கவிருக்கும் தேமுதிகவின் மாநாட்டில் எதிர்கால அரசியல் குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாளை (25ம் தேதி) விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அதில் விஜயகாந்த் கூறியதாவது,
ஏழை மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும், வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நான் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுகிறேன். இதுவரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஏழை பெண்களுக்கு 1,500 தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளேன்.
நான் நடிக்கும் 150வது படத்திற்கு எம்ஜிஆர் என்ற பெயரை வைக்க நினைத்திருந்தேன். ஆனால் வேறொரு நடிகர் அந்தப் பெயரை பதிவு செய்து வைத்திருக்கிறார். சர்க்கார் என்று பெயர் வைக்க யோசனை சொன்னார்கள். ஆனால் தேவையில்லாமல் சர்ச்சைகள் உண்டாகும் என்பதால் அரசாங்கம் என்று வைத்துள்ளேன். அதற்கு யார் என்னை வம்புக்கு இழுக்க போகிறார்களோ தெரியவில்லை.
நான் எனது திருமண மண்டபத்தை இடிக்காமல் இருக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை தமிழக அரசிடம் அனுமதி கேட்டேன். அதுவரை இடிக்காமல் இருந்தால் பாலம் கட்டும் வேலை மிகவும் தாமதமாகிவிடும் என்று சொல்லி அவசர அவசரமாக இடித்து விட்டார்கள்.
இடித்தது சரிதான். ஆனால் இதுநாள் வரை பாலம் வேலை நடந்ததா இல்லை. இதெல்லாம் கேட்டால் எனக்கு அரசியல் தெரியாது என்று கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். எனக்கு தெரிந்த அரசியலைப் பற்றி தேமுதிகவின் வளர்ச்சி சொல்லும்.
வரும் செப்டம்பர் 14ம் தேதி புதுக்கோட்டையில் தேமுதிகவின் மூன்றாம் ஆண்டு மாநாடு நடக்கவுள்ளது. அப்போது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
வெறும் கவர்ச்சித் திட்டங்களையே நம்பும் அரசுகளால் வறுமையை கண்டிப்பாக ஒழிக்க முடியாது. வறுமை ஓழிப்பு இயக்கம் தமிழ்நாட்டில் மக்கள் இயக்கமாக மாறினால் தான் வறுமை ஒழியும்.
லஞ்சம், ஊழல் இல்லாத கொள்கை அடிப்படையிலான ஒரு புதிய அரசியலைத் தருவதே எனது நோக்கமாகும் என்று விஜயகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications