Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் ஆவதற்குள் மாமூல் டிரெய்னிங் - வாலிபர் கைது!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட வாலிபர், லாரியை நிறுத்தி மாமூல் கேட்டபோது கையும் களவுமாக பிடிபட்டுக் கைதானார்.

கடலூர் மாவட்டம் வடலூர் ஆர்.சி.நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (26). இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த காவலர் தேர்வில் பாஸாகி விட்டார். இதையடுத்து பணி நியமன உத்தரவுக்காக காத்துள்ளார்.

ஆனால் உத்தரவு வருவதற்குள்ளாகவே, அக்னி நட்சத்திரம் படத்தில் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்று ஜனகராஜ் சத்தம் போட்டு சந்தோஷமாக கூறுவதைப் போல, நான் போலீஸ் ஆயிட்டேன் என்று எல்லோரிடமும் பந்தாவாக கூறி வந்துள்ளார்.

போலீஸ் தேர்வில் பாஸ் ஆனவுடனேயே மோகன்ராஜுக்கு அந்த ஆசை வந்து விட்டது. கை அரிக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து காக்கி சீருடையை விலைக்கு வாங்கினார். இரவில் தனது நண்பர்களுடன் அந்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு சாலைப் பகுதிக்குப் போய் வருகிற, போகிற வாகனங்களை நிறுத்தி காசு பறிக்க ஆரம்பித்தார்.

போலீஸ் போல கரடு முரடான தோற்றமும், கறார் பேச்சுமாக மோகன் ராஜ் இருந்ததால் அவரை நிஜப் போலீஸ்காரர் என்று எண்ணி பலரும் பணத்தை அழுது விட்டுச் சென்றுள்ளனர். தனது ஊர் வழியாக செல்லும் ஒரு வாகனத்தையும் விடாமல் வளைத்து வளைத்துப் பணம் பறித்துள்ளார் மோகன்ராஜ். கிட்டத்தட்ட செக்போஸ்ட் போல ஆகி விட்டது அந்தப் பகுதி.

மோகன்ராஜும், அவரது நண்பர்களும் படு மும்முரமாக பண வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவில் வழக்கம் போல மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார் மோகன்ராஜ்.

அவருடன் நண்பர்கள் நான்கு பேரும் இருந்தனர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி லைசென்ஸ் இருக்கா, பெர்மிட் இருக்கா என்று கேட்டு, இருந்தாலும், இல்லாவிட்டாலும் காசை தவறாமல் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பட்டுக்கோட்டையை சேர்ந்த தேங்காய் வியாபாரி நடராஜன் ஒரு லாரியில் தேங்காய் ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தார். லாரியை சித்திக் (23) என்பவர் ஓட்டிவந்தார்.

மோகன்ராஜ் அந்த லாரியை நிறுத்தி அடாவடித் தனமாக பணம் கேட்டுள்ளார். ஆனால் நடராஜன் பணம் கொடுக்க மறுத்தார். ஆனாலும் விடாத மோகன்ராஜ், அராஜகமாக சித்திக்கின் பையில் இருந்த 100 ரூபாய் தாளை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் ஆட்டோவில் ஏறிச் சென்று விட்டார்.

மோகன்ராஜின் செய்கை சித்திக்கிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மோகன்ராஜ் சென்ற ஆட்டோவை விரட்டினார். வடலூர் காவல் நிலையம் அருகில் சென்று ஆட்டோவை மடக்கி நிறுத்தினார்.

பின்னர் அவரும், நடராஜனும் லாரியிலிருந்து இறங்கி மோகன்ராஜ் கும்பலை நோக்கி ஓடினர். அதைப் பார்த்த மோகன்ராஜும், அவரது நண்பர்களும் ஆட்டோவை விட்டு இறங்கி ஓடத் தொடங்கினர்.

ஆனலும் விடாத சித்திக், படு வேகமாக ஓடிச் சென்று மோகன்ராஜை மடக்கிப் பிடித்தார். இருந்த ஆத்திரத்தையெல்லாம் ஒன்று திரட்டி கைக்குக் கொண்டு வந்து பலமாக தாக்கினார். இதில் மோகன்ராஜ் நிலை குலைந்தார்.

காவல் நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட இந்த களேபரத்தைப் பார்த்து சப் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஓடி வந்து அவர்களை விலக்கி விட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது நடந்ததைக் கூறினார் நடராஜன்.

இதையடுத்து மோகன்ராஜை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் பின்னர் அவரைக் கைது செய்தார். சண்டையின்போது காயமடைந்த மோகன்ராஜ் மற்றும் சித்திக் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கம்பீரமாக போட்டுக் கொண்டு உலா வர வேண்டிய காக்கி சீருடையை, இப்படிக் களவாணித்தனம் செய்ய பயன்படுத்திய மோகன்ராஜ் போன்றோருக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+