ஷார்ஜாவில் பள்ளிவாசல் புகைப்படக் கண்காட்சி
ஷார்ஜா:
உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களின் புகைப்படக் கண்காட்சி ஷார்ஜாவில் தொடங்கியது.
ஷார்ஜாவில் உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களின் புகைப்படக் கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்த்தான் பின் முஹம்மது அல் காஸிமி துவக்கி வைத்தார்.
இக் கண்காட்சியில் உலகெங்கும் உள்ள நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட அழகுமிகு பள்ளிவாசல்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அக்டோபர் எட்டாம் தேதி வரை தினமும் இரவு எட்டரை மணி முதல் நள்ளிரவு வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.
அபூர்வ நாணயக் கண்காட்சி:
ஷார்ஜா இந்திய சங்கத்தில் அபூர்வ நாணயக் கண்காட்சியை இந்திய கவுன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி திங்கட்கிழமை துவக்கி வைத்தார். இக் கண்காட்சியில் ஷார்ஜா சர்வதேச விமானநிலையத்தில் பணிபுரிந்து வரும் இந்தியரான ஜஸ்டின் கில்பர்ட் லோபஸ் என்பவரால் சேகரிக்கப்பட்ட நாணயங்கள் இக்கண்காட்சியை அலங்கரித்து வருகின்றன.
உலகின் மிகப்பெரும் நாணய சேகரிப்பாளரான இவரது சேகரிப்பிற்கு கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. இக்கண்காட்சி அக்டோபர் 11 ஆம் தேதி வரை நடைபெறும்.
இக்கண்காட்சி மாணவர்களது அறிவுத்திறனை அதிகரிக்கும் நோக்கிலும், நாணயங்கள் குறித்த தகவலைச் சேகரிப்போருக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது.
கண்காட்சியைச் துவக்கி வைத்த கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி பேசுகையில், ஷார்ஜா இந்திய சங்கம், ஜஸ்டினின் முயற்சிகளுக்கு பெரிதும் ஆதரவு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷார்ஜா விமான நிலைய ஆணைய இயக்குநர் அலி சலீம் அல் மித்பா ஜஸ்டினுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் இவரைப் போன்ற திறமை உடையவர்களுக்கு உதவிகள் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஷார்ஜா இந்திய சங்க தலைவர் மேத்யூஸ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
255 நாடுகளைச் சேர்ந்த 255 நாணயங்களை ஜஸ்டின் சேகரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஹாங்காங்கின் சஞ்சய் ரேலன் சேகரித்த 235 நாணயங்கள்தான் முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.
மேலும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் 291 நாடுகளின் ஏழாயிரம் நாணயங்களைச் சேகரித்தமைக்காக இடம்பெற்றுள்ளார்.
ஜஸ்டின் கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகிலுள்ள பூவர் நகரைச் சேர்ந்தவர்.