போலி முத்திரைத்தாள் வழக்கு: குற்றவாளி நவாஸுக்கு 5 ஆண்டு சிறை!
சென்னை:
பல கோடி போலி முத்திரைத் தாள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சர்பிராஸ் நவாஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலி முத்திரைத் தாள் வழக்கில் அப்துல் கரீம் டெல்ஜி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தமிழகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஐஜி முகம்மது அலி, நிஜாமுதீன், முன்னாள் உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி. ஏஜென்ட் ராமசாமி சாது, நிஜாமுதீனின் மனைவி நஸ்னீன், பீட்டர் கென்னடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் டெல்ஜி, சர்பிராஸ் நவாஸ், ஜேக்கப் சாக்கோ, அப்துல் வாஹித், பாலாஜி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்பிராஸ் நவாஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இறுப்பினும் தண்டனை அறிவிக்கப்படாமல் இருந்தது.
இன்று நீதிபதி வேலு தண்டனையை அறிவித்தார். பெங்களூர் சிறையில் உள்ள நவாஸிடம் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடந்தது. அதன் பின்னர் அவருக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி வேலு அறிவித்தார்.
இதேபோல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்ஜி, ஜேக்கப் சாக்கோ, அப்துல் வாஹித் (அனைவரும் புனே சிறையில் உள்ளனர்), பாலாஜி (பெங்களூர் சிறை) ஆகியோரையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.