சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனையில் பெண் தர்ணா
திருநெல்வேலி:
நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் சிகிக்சை அளிக்காததை கண்டித்து பெண் ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
செங்கோட்டை பிரானுர் பார்டரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரியம்மாளுக்கு கர்ப்பபை புற்றுநோய் இருந்தது. இதற்காக அவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அங்கிருந்த டாக்டர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மாலை சிகிச்சைக்கா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாரியம்மாள் சென்றார்.
அப்போது டாக்டர்கள் யாரும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இதனால் அவர் இரவு முழுவதும் மகப்பெறு வார்டு பகுதியிலேயே உட்கார்ந்து இருந்தார்.
பின்னர் நேற்று காலை அவர் கேன்சர் பிரிவு பகுதிக்கு சென்றபோது அங்குள்ள டாக்டர் ஒருவர் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த மாரியம்மாள் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கேன்சர் பிரிவு வார்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மாரியம்மாள் கணவர் முருகன் கூறும்போது எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இங்குள்ள டாக்டர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.