ஹாரிபாட்டர் 'செட்' - வழக்கு
கொல்கத்தா:
கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஹாரிபாட்டர் கதையில் வரும் அரண்மனை போல செட் போடப்பட்டிருப்பதை எதிர்த்து ஹாரிபாட்டர் கதையை எழுதியவரான ஆர்.கே.ரோலிங் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளன. இதுதொடர்பாக துர்கா பூஜை கமிட்டிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி பல்வேறு இடங்களில் கொலு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சால்ட் லேக் பகுதியில் ஹாரிபாட்டர் கதையில் வரும் அரண்மனை போன்ற பிரமாண்ட செட் போட்டு கொலு வைத்துள்ளனர்.
இதையடுத்து எழுத்தாளர் ஜே.கே.ரோலிங்கும், ஹாரிபாட்டர் கதைகளைத் திரைப்படமாக எடுக்கும் உரிமை பெற்றுள்ள வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், துர்கா பூஜை கமிட்டி மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து துர்கா பூஜை கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ராபின் முகர்ஜி கூறுகையில், உயர்நீதிமன்றம் முன்பு ஆஜராகுமாறு எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. செட்டின் 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இப்போது என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை.
இந்த அரண்மனை செட் போடுவதற்கு காப்பிரைட் உரிமை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. அது குறித்து எங்களுக்குத் தெரியவும் தெரியாது. அனைவரையும் கவரும் வகையில் இருக்குமே என்று நினைத்துத்தான் இதைச் செய்தோம் என்றார் அவர்.
இந்த செட் தவிர டைட்டானிக் கப்பல், டிஸ்கவரி விண்வெளி ஓடம் ஆகியவற்றையும் செட் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அனுமதி இல்லாமல் அரண்மனை செட் போட்டதற்காக ஜே.கே.ரோலிங் ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.