பிரதமருக்கு 'செலக்டிவ் அம்னீசியா'-பாஜக கடும் விமர்சனம்
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கின் மூளை குழம்பி விட்டது தெரிகிறது. அவர் தனது அறிவு வறட்சியைக் காட்டி விட்டார் என பாஜக கடும் தாக்குதல் தொடுத்துள்ளது.
இந்த பேச்சுக்காக பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளுக்கு பணிந்துவிட்டதன் மூலம் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வீக்கான பிரதமர் என்பதை நிரூபித்துவிட்டதாக பாஜக கூறியது.
இந் நிலையில் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் பாஜகவை மிகக் கடுமையாகத் தாக்கினார்.
காங்கிரசுக்கோ தனக்கோ எந்த அறிவுரையும் சொல்ல பாஜகவுக்கு எந்தவிதமான யோக்கியதையும் இல்லை என்ற பிரதமர், பாஜக ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் குஜராத்தில் மதக் கலவரம் நடந்து ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொலை செய்யப்பட்டார்கள்.
அதே போல ஆக்ராவில் பாகிஸ்தான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி அடைந்ததும் பாஜக ஆட்சியில் தான். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் ஊடுருவியதும் கார்கில் போர் வந்ததும் பாஜக ஆட்சியில் தான்.
இப்படிப்பட்ட முகத்தை வைத்துக் கொண்டு நான் ஆட்சியில் நீடிப்பதற்கு தகுதியில்லை என்று பேச பாஜகவுக்கு எந்த விதத்திலாவது தகுதி உள்ளதா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
பிரதமரின் இந்தத் தாக்குதலுக்கு இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
மன்மோகன் சிங் பிரதமர் ஆனதே ஒரு விபத்து தான். அவர் கால தாமதமாக அரசியலுக்கு வந்தவர். காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கான விலையை நாடு இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மன்மோகன்சிங் அதை மறந்து விட்டார். அவருக்கு செலக்டிவ் அம்னீஷியா' (இதே நோய் தான் அத்வானிக்கு இருப்பதாக ஜெயலலிதா ஒரு காலத்தில் சொன்னார்)
ஆக்ரா பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கூறியதன் மூலம் மன்மோகன் சிங்கின் மூளை குழம்பி விட்டது தெரிகிறது. அவர் தனது அறிவு வறட்சியைக் காட்டி விட்டார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்று வாஜ்பாய் திட்டவட்டமாக கூறியதால்தான் ஆக்ரா பேச்சுவார்த்தை தோற்றது.
மன்மோகன்சிங்கின்து அரசியலில் உறுதிப்பாட்டுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் இடமில்லை. மிகவும் பலவீனமான பிரதமரான அவருக்கு மந்திரிசபையின் ஆதரவோ, காங்கிரசின் ஆதரவோ, கூட்டணி கட்சிகளின் ஆதரவோ இல்லை.
குஜராத்தில் நடைபெற்ற துரதிஷ்டமான கலவரத்தை இன படுகொலை என்று மன்மோகன்சிங் வர்ணித்துள்ளார். அப்படியானால், 1984ம் ஆண்டு சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டது பற்றி அவரது கருத்து என்ன?
கார்கில் போர் பற்றியும் மன்மோகன்சிங் கூறியுள்ளார். கார்கில் போரில் ஒரு அங்குல நிலத்தைக்கூட நாம் இழக்காமல் மீட்டு விட்டோம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போர்களில் காஷ்மீரிலும், வட-கிழக்கிலும் ஏராளமான பகுதிகளை இழந்து விட்டோம்.
தன் சுயநினைவோடு தான் பிரதமர் இப்படிக் கூறுகிறாரா என்று தெரியவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தோல்வியால் அதிர்ந்து போயுள்ள மன்மோகன் சிங் பாஜகவை தாக்கியுள்ளார். உங்கள் கோபத்தை எங்கள் மீது காட்ட வேண்டாம் என்றார் பிரசாத்.
பாஜகவின் இந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன திவிவேதி கூறுகையில்,
பிரதமர் என்பவர் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரதிநிதியாக இருப்பவர். அவர் மீது இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக யோசித்துவிட்டு பேச வேண்டும். பாஜக செய்தித் தொடர்பாளர்களும், நிர்வாகிகளும் நல்ல, சீரான மனநிலையுடன் பேசுமாறு அந்தக் கட்சியின் தலைமை அறிவுறுத்த வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், பிரதமரை அவமதித்துப் பேசியதன் மூலம் நாட்டையே அவமதித்துவிட்டது பாஜக. இந்த அநாகரீக பேச்சுக்கு பாஜக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.