கல்லூரிகளிலும் செல்போனுக்கு தடை கோரும் ராமதாஸ்
சென்னை: பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது போல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது போல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகளும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இளைஞர்களின் சக்தி செல்போன் பேச்சால் வீணடிக்கப்படுகிறது.
முன்பெல்லாம் திருமணம் நிச்சயமான பின்னர் ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் தொலைபேசியில் பேசிக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது முன்பின் அறிமுகமே இல்லாத நபரிடம் கையில் செல்போன் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசி முனங்கிக் கொண்டிருக்கிறார்கள். கண்டதும் காதல், காணாமல் காதல் மாதிரி இது செல்போனில் காதல். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
கடந்த 16ம் தேதி நடந்த அரசு விழா ஒன்றில் இளைஞர்களை கெடுக்கும் வகையில் கெட்ட நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தியேட்டரில்தான் இது போன்று நடனங்களை ஆடுகிறார்கள் என்றால் இந்த விழாவில் யாருக்காக அப்படிப்பட்ட நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. இது இளைஞர்களை கெடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
பாமக ஏற்கனவே தமிழகத்தின் தொழில் வளர்ச்சி வேளாண்மை உற்பத்தி, இளைஞர்கள் மறுமலர்ச்சி போன்றவற்றுக்காக மாற்றுத்திட்ட ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது 2020ல் தமிழகம் ஒரு தொலைநோக்கு திட்டம் என்ற ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளோம்.
தமிழகத்தின் அனைத்து துறை வளர்ச்சிக்கான சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தமிழக தொலைநோக்கு திட்டத்தில் வறுமை ஒழிந்து வளம் கொழிக்கும் மாநிலமாக மாற வேண்டும் என்பதே பாமகவின் கனவாகும். அதை நனவாக்க தொகுத்து வழங்கி இருக்கிறோம். இது வெற்று முழக்கமல்ல.
எல்லோருக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அடிப்படை பொருளாதார வசதிகளை வழங்குதல் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். வேலை தேடும் நிலையை மாற்றி வேலையை உருவாக்கி மாற்றம் ஏற்படுத்துதல், அதற்கு ஏற்றவாறு கல்வியின் தரத்தை மாற்றி அமைத்தல் போன்றவையாகும்.
தற்போது எந்த துறையானாலும் திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதியான அணுகுமுறை இல்லை. கொள்கை நிலைப்பாடு இல்லை. உறுதியான திட்டங்கள், வழிகாட்டுதல் கிடையாது. இதற்கெல்லாம் மாற்றுவழி என்ன என்பதை எங்கள் ஆவணத்தில் கூறியுள்ளோம்.
எதற்கெடுத்தாலும் குறை சொல்கிறார்கள், எதை அறிவித்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று எங்கள் மீது முத்திரை குத்த சிலர் படாதபாடு படுகிறார்கள். அவர்களுக்கான பதில் எங்கள் மாற்றுத்திட்ட ஆவணத்தில் சொல்லியிருக்கிறோம்.
இதை தமிழக மக்களின் ஆய்வுக்கும், முடிவுக்கும் வைக்கிறோம். இந்த ஆவணத்தை தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அனைத்துக் கல்லூரிகள், ஊடகங்கள் என அனைவரிடமும் அளிக்க உள்ளோம். இந்த திட்ட ஆவணத்தை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக் கொள்வதும், கொள்ளாததும் அவர்களது விருப்பமாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications