கணவரைக் கொல்ல தீவிரவாதிகளை நாடிய பெண்
ஸ்ரீநகர்: கணவரைக் கொல்வதற்காக தீவிரவாதிகளின் உதவியை நாடிய பெண்ணை ஜம்மு காஷ்மீர் போலீஸார் கைது செய்து அந்த அப்பாவி கணவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து சும்பால் கோட்ட துணை காவல் அதிகாரி ஹர்மீத் சிங் கூறுகையில், வடக்கு காஷ்மீர், பந்திப்பூரா மாவட்டம், ஆஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஷஹீனா. இவரது கணவர் பஷீர் அகமது. இவரும் இதே பகுதியைச் சேர்ந்தவர்தான்.
இருவருக்கும் சமீப காலமாக உறவு கசந்துள்ளது. அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
கணவர் மீது வெறுப்பு அதிகமாகவே அவரைக் கொலை செய்ய ஷஹீனா தீர்மானித்தார். இதற்காக தீவிரவாதிகளின் உதவியை அவர் நாடியுள்ளார்.
இதற்காக லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அபு கிதார் என்ற தீவிரவாதியுடன் தொடர்பு கொண்டுள்ளார். தனது கணவரைக் கொல்ல வேண்டும் என்று கிதாரிடம் கோரியுள்ளார். அதற்கு கிதாரும் சம்மதித்தார். தானும், மேலும் இருவரும் சேர்ந்து இதை செய்வதாக அவர் ஷஹீனாவிடம் உறுதியளித்தார்.
பின்னர் சதித் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, தனது கணவருடன் சமாதானமாகப் போவது போல பேசி, சும்பால் மாவட்டம் விஜய்புரா என்ற இடத்திற்கு பஷீர் அகமதுவை, ஷஹீனா வரவழைக்க வேண்டும். அங்கு வைத்து கிதார், அவரது கூட்டாளிகளான (இவர்களும் தீவிரவாதிகள்தான்) பயஸ் அகமது, அப்துல் ஹமீது ஆகிேயார் சேர்ந்து பஷீரை கொலை செய்வது என திட்டம் தீட்டப்பட்டது.
இந்த நிலையில் போலீஸாருக்கு இந்த சதிச் செயல் குறித்துத் தெரிய வந்தது. இதையடுத்து விஜய்புரா விரைந்த போலீஸார் பயஸ் அகமது, அப்துல் ஹமீது ஆகிய இருவரையும் வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கைத் துப்பாக்கி, கையெறி குண்டு ஆகியவர்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஷஹீனாவையும் போலீஸார் கைது செய்தனர். இந்தப் பெண்ணுக்கு, தீவிரவாதிகளுடன் வேறு என்னென்ன தொடர்புகள் இருக்கிறது என்பது குறித்து தற்போது போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.