தமிழக அரசின் இலவச டிவி கேரளாவில் அமோக விற்பனை
கோவை: தமிழக அரசு வழங்கும் இலவச டிவி பெட்டிகள், கேரளாவில் நல்ல விலைக்கு விற்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி கூறியபடி ஏழை, எளியோருக்கு இலவச டிவி பெட்டிகளை வழங்கி வருகிறது. பெரும் பொருட் செலவில் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனால் இடையில் புகுந்த சில விஷமிகள் அரசின் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். இதனால் திமுக அரசுக்கு பெயர் கெடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இலவச கலர் டிவி பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட கீழ் குந்தா பேரூராட்சி, முள்ளிகூர், இத்தலார், பாலகொலா, குந்தா ஆகிய ஊராட்சிகளிலும் இந்த டிவி பெட்டிகள் வழங்கப்பட்டன. பிக்கட்டி
பேரூராட்சியில் மட்டும் இன்னும் தரவில்லை. குந்தா தாலுகாவில் மட்டும் ஏறக்குறைய 12 ஆயிரத்திற்கும் அதிகமான டி.வி. கள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளது.
ஆனால் டிவி வாங்கியவர்கள் பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஏற்கனவே கலர் டிவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரது வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிகள் உள்ளனவாம்.
இதை தங்களுக்கு சாதக மாக்கி கொண்ட சில வியாபாரிகள், கூடுதல் டிவி வைத்திருப்போரை அணுகி ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் என்று விலை பேசி வாங்கியுள்ளனர்.
பின்னர் அதை நீலகிரி, கோவை மாவட்டங்களை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் ரூ. 2000 முதல் 2500 ரூபாய் வரை விலை வைத்து விற்று வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லையில் சில டிவி கடைகளிலேயே பகிரங்கமாக இலவச டிவியை சில மாதங்ளுக்கு முன்பு சிலர் விற்று பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் இந்த டிவிகள் தவறுதலாக கடைகளுக்குப் போய் விட்டதாக சம்பந்தப்பட்ட டிவி நிறுவனம் விளக்கியதால் சர்ச்சை ஓய்ந்தது.
ஆனால் இப்ேபாது தமிழக அரசின் இலவச கலர் டிவி பெட்டிகள் கேரளாவில் அமோகமாக விற்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கி இடையில் புகுந்து இதுபோன்ற வியாபாரிகளை தட்டி வைக்காவிட்டால், அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.