தொழிலதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை
சென்னை: சென்னையில் தொழிலதிபரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 200 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்த துணிகர திருட்டு குறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டனில் வசித்து வருபவர் சந்திரன். கிரானைட் தொழில் நடத்தி வருகிறார். நேற்று இரவு வீட்டில் அவர் மட்டும் இருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவில் கொள்ளையர்கள் சிலர் அங்கு வந்துள்ளனர். வீட்டில் உள்ள ஏ.சி. மெஷினை கழற்றியுள்ளனர். பிறகு அந்த வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.
படுக்கை அறையில் சந்திரன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். உள்ளே வந்த திருடர்கள், படுக்கை அறையில் இருந்த பீரோவை திருட்டு சாவியால் திறந்து உள்ளே இருந்த 200 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
காலையில் விழித்தெழுந்த சந்திரன் பீரோ திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார். அதில் இருந்த நகைகள் திருடப்பட்டதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்த அவர் செக்ரட்ரியேட் காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் சகிதம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயங்களை சேகரித்தனர். திருடு போன நகைகளின் மதிப்பு ரூ. 15 லட்சம் என கூறப்படுகிறது.
திருட்டு நடந்த பகுதி மிகப் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி. அது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் கட்சிகளின் மிக முக்கியத் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்களும் இங்குதான் வசிக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு காவலாளியாவது இருக்கிறார். போலீஸ் பாதுகாப்பும் உள்ளது. இப்படிப்பட்ட பகுதியில் நடந்துள்ள இந்த துணிகர திருட்டு போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணிகர திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் தங்களது விசாரணையை பல கோணங்களில் முடுக்கி விட்டுள்ளனர்.