நெல்லை, தூத்துக்குடியில் கனமழை- பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
திருநெல்வேலி: நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியதால் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளில் 6 கண்மாய்கள் உடைந்து பல ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்ததது. இதனால் அப் பகுதி மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் பகுதியில் பெய்த மழையால் பாப்பான் கால், சீவலங்கால் மற்றும் பெரியாற்று படுகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று அதிகாலை 2 மணி அளவில் பாப்பான்கால் வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமானது.
இதனால் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பாப்பான்கால்வாய், கரையோர பகுதிகளில் உள்ள 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசிப்பவர்கள் அவசர, அவசரமாக வெளியேறி மேடான பகுதிக்கு சென்றனர்.
மேலக்கடையநல்லூரில் உள்ள அண்ணாமலை நாதர் கோயில் குளம் உடைந்து அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் புகுந்தது. தற்போது அந்த பகுதிகளில் நெல் நாற்று பாவியிருந்தனர். அவை அனைத்தும் தண்ணீரில் முழ்கியுள்ளன.
மழையால் கடையநல்லூர் எம்.எல்.ஏ அலுவலக கம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் பாப்பான்கால்வாய் கரையில் உள்ள பல வீடுகளின் கம்பவுண்ட் சுவர்களும் இடிந்தன. விடிய விடிய பெய்த மழையால் கடையநல்லூர் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.