சைக்கோ கணவன்-தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி
சென்னை: குடித்துவிட்டு தன்னை சிகரெட்டால் சூடு போட்டு சித்ரவதை செய்து ரசித்து வந்த சைக்கோ கணவரை மனைவி தலையில் பாறாங் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்றார்.
மேட்டூர் அருகே உள்ள குதிரைக்காரன்பட்டியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 33). இவரது மனைவி விஜயா (29).
இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஏழுமலை கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் கொண்ட ஏழுமலை மனைவியை சித்ரவதை செய்வது வழக்கமாம்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த கணவரை தலையில் கல்லைப் போட்டு கொன்றார் விஜயா. இதையடுத்து தப்பிச் சென்ற விஜயா செங்கல்பட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
என் கணவர் குடித்துவிட்டால் மனிதனாக நடந்து கொள்ள மாட்டார். நாங்கள் உல்லாசமாக இருக்கும்போது சிகரெட்டால் எனது உடலில் சூடு போட்டு சித்ரவதை செய்து அதை ரசிப்பார். அதை என்னால் தடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன்.
வழக்கம் போல் சம்பவம் நடந்த அன்றும் குடித்துவிட்டு வந்து என்னிடம் உறவு கொண்டார். அப்போதும் சிகரெட்டால் சுட்டு கொடுமை செய்தார். சித்ரவதையை பொறுக்கவும் தாங்கவும் முடியவில்லை.
இதையடுத்து நானே அவருக்கு 3 பாட்டில் மது வாங்கி கொண்டு வந்து கொடுத்து குடிக்க வைத்தேன். அவர் குடித்துவிட்டு சாய்ந்ததும் அவரது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டு கொன்றேன் என்று கூறியுள்ளார் விஜயா.
குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட விஜயாவை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விஜயா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications