விஷ உணவு: சவூதியில் 3 இந்திய சிறுவர்கள் மரணம்
ஜெட்டா: விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 3 இந்திய சிறார்கள், சவூதி அரேபியாவில் உயிரிழந்தனர்.
கியூன்புடா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் முகம்மது இபின் மபோஸ் இதுகுறித்து கூறுகையில், விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால்தான் இவர்கள் மூன்று பேரும் இறந்திருப்பதாக சந்தேகிக்கிறோம்.
சனிக்கிழமை இரவு இந்தக் குழந்தைகள் மற்றும் அவரின் பெற்றோர்கள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்காக ஜெட்டா மற்றும் மெக்காவில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு சோதனைக்குப் பின்னர் மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படும்.
உணவு சாப்பிட்ட அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சனிக்கிழமை நள்ளிரவில் மருத்துவனைக்குக் கொண்டு வரப்பட்டனர். குடும்பத்தினர் அனைவரின் வயிறுகளும் சுத்தப்படுத்தப்பட்டன.
ஆனால் 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டன. அவர்களின் பெற்றோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றார்.
உ.பி.யைச் சேர்ந்தவர்கள்
உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த முகம்மது காலித் இக்பால், சவூதி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி உஸ்மா. காலித் இக்பால் உ.பி. மாநிலம் அலிகார் நகரைச் சேர்ந்தவர்.
இறந்த குழந்தைகள் சிறுவன் அனாஸ் (6), சிறுமிகள் மரியம் (3), நஜ்லா (9) ஆகியோர் ஆவர்.
தாங்கள் சாப்பிட்டது குறித்து உஸ்மா கூறுகையில், ஒரு ஹோட்டலில் இரவு சிற்றுண்டியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியில், பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்குச் சென்றோம். அங்கிருந்து வரும்போது பூச்சிக் கொல்லி வாசத்தை நுகர்ந்தோம். அதன் பின்னர் சாப்பிட்டோம். பிறகுதான் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதேசமயம், தாங்கள் வெளியிலிருந்து உணவு வாங்கி வரவில்லை என்றும், தனது மனைவிதான் உணவை சமைத்ததாகவும், காலித் கூறியுள்ளார். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காலித் கூறுகையில், இரவு சாப்பாட்டுக்காக சப்பாத்தி, பருப்பு குருமா, தானியம், காய்கறி அடங்கிய கூட்டு ஆகியவற்றை எனது மனைவி சமைத்தார்.
சாப்பிட்டு விட்டு அனைவரும் படுத்து விட்டோம். அதிகாலை 3.30 மணியளவில் அனாஸ் தனது தாயாரை எழுப்பினான். வாந்தி வருவதாக கூறினான். அவனது சகோதரிகளுக்கு சளி பிடித்திருந்ததால், அவனுக்கும் சளி பிடித்திருக்கலாம் என எனது மனைவி நினைத்தார்.
ஆனால் அனாஸ் தொடர்ந்து 2 முறை வாந்தி எடுத்தான். அப்போது மரியமும், தொடர்ந்து நஜ்லாவும் எழுந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றோம். எங்களது பக்கத்து வீட்டில், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் வசித்து வருகின்றனர். அவர்களின் வீட்டில் மூட்டைப் பூச்சித் தொல்லை இருப்பதால் அடிக்கடி பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்துவார்கள். நாங்கள் அதை அடிக்கடி சுவாசிக்க வேண்டியிருந்தது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications