விமான நிலையத்திற்குத் தேவர் பெயர்: தடுத்த ஓ.பி. - சுவாமி தகவல்
சென்னை: 2001ம் ஆண்டிலேயே எனது முயற்சியால், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த நிலையில் தனது முயற்சியால் ஏற்கனவே இதற்கான அனுமதியை மத்திய அரசு கொடுத்து விட்டதாகவும், ஆனால் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு அதைத் தடுத்து விட்டதாகவும், தற்போது முதல்வர் கருணாநிதி அந்தப் பெயரைத் தட்டிச் செல்ல முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார் சுவாமி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2001ம் ஆண்டு, சரத்யாதவ் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரியதன் பேரில் அதற்கான அனுமதியை சரத் யாதவ் வழங்கினார்.
ஆனால் அன்று தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதை எதிர்த்து சரத் யாதவுக்கு கடிதம் எழுதினார். மாநில அரசு ஆட்சேபித்ததால் தேவர் பெயர் சூட்டும் உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டது.
ஆனால் தற்போது தேவர் பெயரை தான் தான் சூட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி பெயரைத் தட்டிச் செல்ல முதல்வர் கருணாநிதி முயற்சிக்கிறார்.
இப்போது கருணாநிதி செய்ய வேண்டியதெல்லாம், ஓ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெற்றால் போதும். அதன் பின்னர் உடனடியாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரைச் சூட்டுவதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிடும் என்று கூறியுள்ளார் சுவாமி.