நிபந்தனைகளுட்பட்டு பட்டாசு வெடிக்க வேண்டும்: காவல்துறை
சென்னை: தீபாவளியன்று உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு விறபனை மற்றும் வெடிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளை பட்டாசு வியாபாரிகளும், பட்டாசு வெடிக்கும் பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
பட்டாசு கடைகளை ஓலை கொட்டகைகளில் போடக்கூடாது. இரண்டு கடைகளுக்கு இடையில் குறைந்த பட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். எதிர் எதிரே பட்டாசு கடைகள் வைக்கக்கூடாது.
பட்டாசு கடைகளில் மணல் மூட்டைகளும், தண்ணீர் நிரம்பிய தொட்டியும் வைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்பான்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கடைகளில் தீ விபத்துகளை எளிதில் உண்டாக்கக்கூடிய மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றை பயன்படுத்த கூடாது. சுவரில் பதிக்கப்பட்ட மின்சார விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
பட்டாசு கடைகள் இருக்கும் இடங்களில் 50 மீட்டர் சுற்றளவில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பட்டாசு கடைகளில் ஒரே நேரத்தில் ஆயிரம் கிலோவுக்கு அதிகமாக பட்டாசுகள் வைக்கக் கூடாது.
6 டூ 10 மணி வரை மட்டுமே வெடிக்கலாம்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் அவர்களை கவனமாக பார்த்து கொள்ளவேண்டும். காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேம்டும்.
வயதானவர்களும், நோயாளிகளும் எந்தவகையிலும் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதனால் அதிகம் சத்தம் உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications