ஜெ-சசி மீதான வருமான வரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: வருமான வரி கணக்கு காட்டாத வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கடந்த 1993-94ம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில், ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரி கணக்கு காட்டவில்லை.
இதையடுத்து அவர்கள் மீது வருமான வரித்துறையினர் எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 1998ம் ஆண்டு மத்திய அரசு ஒரு புதிய கொள்கை முடிவு அறிவித்தது.
அதன்படி, வருமானவரி செலுத்துவது தொடர்பாக நிலுவையில் உள்ள கணக்குகளை வருமான வரி தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
அதன்படி ஜெயலலிதாவும், சசிகலாவும் தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், வருமான வரி நிலுவை கணக்கைக் காட்டி சரி செய்து கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.
தீர்ப்பாயம் மனுவை விசாரித்து, பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து வருமான வரித்துறை உதவி ஆணையாளர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை நீக்கக்கோரி ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று முடிவடைந்தது. இதையடுத்து நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தது.