புலிகளுக்கு மீனவர்கள் டீசல் விற்பனை?: விசாரணைக்கு உத்தரவு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் விடுதலைப் புலிகளுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் டீசல் விற்றதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக் கடலில் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துள்ளனர்.
நான்கு படகுகளில் விடுதலைப் புலிகள் வந்துள்ளனர். நடுக் கடலில் வைத்து அவர்களிடம் தமிழக மீனவர்கள் 20 லிட்டர் டீசலை தமிழகத்தில் விற்பதை விட 3 மடங்கு அதிக விலை வைத்து விற்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சில மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டீசல் விற்பனை குறித்து விசாரணைக்கு மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
டீசல் விற்றது உண்மை என்று தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களது படகுகளுக்குக் கொடுக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படை சீருடை அணிந்து சிலர் வந்து மீனவர்களை மிரட்டி அவர்கள் வைத்திருந்த மீன் உள்ளிட்ட பொருட்களை அபகரித்து சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
சர்வதேச எல்லையை கடந்து வந்து மீன் பிடிக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அந்த மர்ம நபர்கள் எச்சரித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications