For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. பித்தலாட்ட அரசியல்-வீரபாண்டி ஆறுமுகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு துரோகங்களை மட்டுமே வழங்கிய ஜெயலலிதா, உண்மைகளை மறைத்துவிட்டு பித்தலாட்ட அரசியல் செய்து வருகிறார் என வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விவசாயிகளுக்கு கரும்புக்கு பணம் கொடுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் 9 இடங்களில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. 2006-2007ம் ஆண்டு கூட்டுறவு, பொதுத்துறை, ஆலைகளில் அரைக்கப்பட்ட கரும்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்த விலைக்கான தொகைகள் வழங்கப்பட்டு விட்டன.

தனியார் ஆலைகள் தாங்கள் அரவை செய்த கரும்புகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டுள்லன. தனியார் ஆலைகள் பதிவு செய்யப்படாத கரும்புகளையும் அரவை செய்ய வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒதுக்கீடு செய்த கரும்புகளை அக்டோபர் மாதம் இறுதி வரை அரவை செய்து கொண்டிருந்தன. இதற்குரிய தொகையை இப்போது வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.250 கோடி வரை விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக ஜெயலலிதா சொல்வது உண்மைக்கு மாறானது. ரூ.102 கோடிதான் தர வேண்டியுள்ளது. இதில் ரூ. 16.70 கோடி தான் 90 நாட்களுக்கு மேல் வழங்கப்படாத தொகையாகும். இதையும் கூட விவசாயிகளுக்கு உடனே வழங்க தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளை ஏமாற்றி வருபவர் ஜெயலலிதா தான். நடப்பாண்டில் பதிவு செய்யாத கரும்பினை கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் ஆலைகளில் 8 லட்சம் டன்னுக்கு மேல் அரவை செய்து விவசாயிகள் மகிழ்ச்சியடையச் செய்தவர் கருணாநிதி தான்.

இதைப் போல அதிமுக அரசு எந்த ஆண்டிலாவது பதிவு செய்யாத கரும்பினை அரவை செய்ததுண்டா. அதிமுக ஆட்சியில்தான் 2001ம் ஆண்டில் அருணாச்சலம் என்ற புதிய சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டு, 2003-2004 அரவை பருவத்திலேயே மூடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியத் தொகை பெற்றுத் தராத ஜெயலலிதா தற்பொழுது விவசாயிகள் மீது அக்கறை கொண்டவர் போல நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

2006ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு அருணாச்சலம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு கொடுத்த தொகை போக இன்னும் தர வேண்டிய மீதித் தொகை ரூ.2.15 கோடியை ஆலையிடம் இருந்து வசூல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வருவாய்த்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிக்கை போர் ஜெயலலிதா அறிய நியாயமில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் தான் கரும்பு ஏற்றிச் செல்லும் லாரி வாடகையை ஆலைகளே கொடுக்க, அரசு ஆணையிட்டதாக ஜெயலலிதா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. திமுக ஆட்சியில்தான் கரும்பு வண்டி வாடகையை முழுவதுமே ஆலைகளே ஏற்க வேண்டுமென ஆணையிடப்பட்டதை கரும்பு விவசாயிகள் அறிவார்கள்.

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச விலையுடன் மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்காமல் ஏமாற்றி கரும்பு விவசாயிகளுக்கு துரோகங்களை மட்டுமே வழங்கிய ஜெயலலிதாவை விவசாயிகள் இனங்கண்டு கொள்வார்கள். அவர்களை ஏமாற்றி அரசியல் லாபம் அடைய முடியாது என எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X