மேட்டூர் செம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து காஸ் கசிவு - 7 பேருக்கு பாதிப்பு
மேட்டூர்: சென்னையைப் போலவே, மேட்டூரிலும் செம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வெளியான வாயுக் கசிவால் 7 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையின் சில பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு மர்ம வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பும், பீதியும் அடைந்தனர். காற்றில் பரவிய ஹைட்ரோகார்பன்களால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பின்னர் அதிகாரிகள் விளக்கினர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூரிலும் நேற்று வாயுக் கசிவு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூரில் செம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் ஆலை உள்ளது. இந்த ஆலையில் குளோரின் மற்றும் காஸ்டிக் சோடா ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு நேற்று மதியம் 11 மணி வாக்கில் மின்சாரத் தடை ஏற்பட்டது. அப்போது ஆலையிலிருந்து குளோரின் வாயு கசிந்துள்ளது.
இதை நுகர்ந்த பலருக்கும் வாந்தி, உடல் நடுக்கம், கண் எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவை ஏற்பட்டன. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது. ஏராளமான மக்கள் சன்மார் நிறுவனம் முன்பு கூடி உடனடியாக ஆலையை மூடக் கோரி கோஷமிட்டனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, இந்த காஸ் கசிவு குறித்து செம்பிளாஸ்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உற்பத்தி நிலையில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகவே காஸ் கசிவு ஏற்பட்டது.
காற்றில் பரவும் காஸ் கசிவைக் கண்டறிவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி 6 கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் மின்சாரத் தடை காரணமாக 3 கருவிகள் செயல்படாமல் போய் விட்டன. இதன் காரணமாகவே குளோரின் வாயுக் கசிவைக் கண்டறிய முடியவில்லை.
இருப்பினும் காற்றில் பரவிய குளோரின் வாயுவின் அளவு மிகவும் குறைவுதன். இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது. நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.
காஸ் கசிவு குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்து விட்டோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
சென்னையைப் போலவே தங்களது பகுதியிலும் காஸ் கசிவு ஏற்பட்டதால் மேட்டூர் பகுதி மக்கள் நேற்று பீதியுடன் காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications