அரசின் வேண்டுகோளை ஏற்று வேளாண் மாணவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
கோவை: வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டிருந்த காலவரையற்ற ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசின் விவசாயத் துறை, விவசாய பொறியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த புதன்கிழமை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாணவர்கள், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதையடுத்து பல்கலைக்கழகம், கல்லூரிகள் மூடப்பட்டன. விடுதிகளும் மூடப்பட்டன. இருப்பினும் பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவ, மாணவியர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உண்ணாவிரதம் இருந்த பல மாணவ, மாணவியர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறை செயலாளர், நிதித்துறைச் செயலாளர், வேளாண்துறை இயக்குநர் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, வேளாண் மாணவர்களின் 11 கேரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாணவ, மாணவியர் முன்வைத்த 11 கோரிக்கைகளில் பெரிய முரண்பாடுகளோ, கருத்து மாறுபாடுகளோ அரசுத் தரப்பில் கிடையாது.
மாணவர்களின் பிரதிநிதிகள் துறையின் அமைச்சரையோ, அதிகாரிகளையோ உடனடியாக சந்தித்துப் பேசி நல்ல முடிவுகளை எடுப்பதில் எந்தவிதமான சிரமமும் இல்லை என்பதால் வேளாண் மாணவர்கள் தங்களது போராட்டத்தினை உடனடியாக நிறுத்திக் கொண்டு படிப்பைத் தொடருவதோடு தங்களின் கோரிக்கைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள வழி வகை காணலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.
அரசின் இந்த வேண்டுகோள் குறித்து கோவை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அரசின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொள்ள அவர்கள் முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகலில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது












Click it and Unblock the Notifications