Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளை நிலங்களை ஆக்கிரமித்தே கல்லூரி கட்டினார் ராமதாஸ்: 'ஆற்காடு' பதில் 'அட்டாக்'

Subscribe to Oneindia Tamil


சென்னை: விளை நிலங்களில்தான் டாக்டர் ராமதாஸ் கல்லூரிகளை கட்டிவருகிறார்' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் ராமதாஸ் உருவாக்கியுள்ள அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டு வரும் கல்லூரி அமைந்துள்ள இடம் நூறாண்டு காலத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் கரம்பாக கிடந்த களர் நிலம் என்றும் அங்கே விளைநிலங்கள் அமைந்திருந்தது என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார், நிரூபிக்க தவறினால், பாவம் அந்த அமைச்சர் அரசியலில் நீடித்து போகட்டும், குறைந்த பட்சம் மக்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு அமைச்சர் தயாரா? என்றும் டாக்டர் ராமதாஸ் சவால் விட்டிருக்கிறார்.

ஆத்திரம் அறிவுக்கு சத்துரு என அவர் கூறியுள்ளார். நான் ஆத்திரப்படவில்லை, அமைதியாகத்தான் அறிக்கை விட்டேன். அவர் தான் ஆத்திரப்பட்டு அறிக்கை விட்டுள்ளார். அவரது சவாலுக்கு எதிர் சவால் விட எனது கழகத் தலைமை அனுமதிக்காது என்பதால் விளக்கம் மட்டும் அளிக்க விரும்புகிறேன்.

டாக்டர் ராமதாஸ் கல்லூரி நடத்துவதை பற்றியோ, அதில் வன்னிய மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் கூட வசூலிக்காமல் தரமான கல்வியை கொடுத்து கொண்டிருப்பதாலோ எனக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. உண்மையில் மிகவும் பின்தங்கிய மக்களாகிய வன்னிய மக்களுக்காவது இலவசக் கல்வியும், இலவச உணவும் கொடுத்து வருவதற்கு எனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால் நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய அளவிற்கு, நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அந்த கல்லூரி அமைந்துள்ள இடம் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் கரம்பாக கிடந்த களர் நிலம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது முழுக்க முழுக்க தவறான தகவல் ஆகும்.

ஒலக்கூர் கீழ்ப்பாடி கிராமத்தில் வாய்க்கால் அமைந்திருப்பதும், அந்த பகுதியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 1991ம் ஆண்டு இந்த இடங்கள் கல்லூரி கட்டுவதற்காக வாங்கப்படும் வரை யார் யார் அங்கே என்ன என்ன பயிர் செய்து வந்தார்கள் என்பதற்கான விவரங்களையும், அதற்கான சர்வே எண்களையும், அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்திய வரி விவரங்களையும் பின்வருமாறு தெரிவித்து கொள்கிறேன்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையால் கிரயம் பெறப்பட்ட நிலங்கள் சாகுபடிக்கு உரிய நிலங்களா என்பது குறித்து ஐந்தாண்டுகளுக்கு முந்தைய அடங்கல் விவரங்களை பார்வையிட்டால், அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த உண்மையையும், அந்த பட்டா நிலங்கள் ஏற்கனவே விளை நிலங்களாக இருந்ததையும் அறியலாம்.

1. ஒலக்கூர் கீழ்பாதி கிராமம்-(புல.எண்) 229/2- (விஸ்தீரணம் ஹெக்டேரில்) 4.00-சவுக்கு (1411ம் பசலி ஆண்டு (2001-2002) பயிர் செய்யப்பட்டது

2.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1- 0.10-பூஞ்செடி பயிர் செய்யப்பட்டது

3.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1 - 0.90- நெல் பயிர் செய்யப்பட்டது

4.ஒலக்கூர் கீழ்பாதி- 230/3 - 4.62- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

5.நல்லாத்தூர்- 54/1 முதல் 12 வரை- 3.93- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

6.நல்லாத்தூர்- 52/1 - 0.34- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

7.நல்லாத்தூர் -52/2- 0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

8.நல்லாத்தூர் -52/3 -0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

இது தவிர வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பான ஆதாரம்:

திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பட்டா எண் 300ல் 41.18.5 ஹெக்டேர் புஞ்செய் நிலம் உள்ளது. மற்றும் நல்லாத்தூர் கிராமத்தில் பட்டா எண் 16ல் 3.93 ஹெக்டேர் புஞ்செய் நிலம் வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது. மேற்படி இடம் முழுவதும் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் வேலியிடப்பட்டுள்ளது.

இந்த வேலி வளைக்கு உட்பட்ட பகுதியில் ஒலக்கூர் கீழ்பாதி கிராம எல்லைக்கு உட்பட்ட பின்வரும் அரசு புறம்போக்கு நிலங்கள் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

210 (புல.எண்)-4.28.0 (மொத்த விஸ்தீரணம்) - 1.20.0 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்)-மேய்ச்சல் தரை

236/2 (புல.எண்) - 0.06.5 (மொத்த விஸ்தீரணம்) - 0.06.5 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்)-அணைக்கட்டு

232/2 (புல.எண்) - 0.20.0 (மொத்த விஸ்தீரணம்) - .20 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்) - அணைக்கட்டு

இது போன்று நல்லாத்தூர் கிராம எல்லைக்கு உட்பட்ட புல.எண் 52/4ல் 1.96 ஹெக்டேர் நிலம் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது அரசு புறம்போக்கு பகுதியாகும்.

இந்த இடம் முழுவதிலும் வேலி வளைப்பு செய்யப்பட்டு புல் வளர்க்கப்பட்டுள்ளது. புல.எண் 54/13ல் 0.06.5 விஸ்தீரணம் கொண்ட மயான புறம்போக்குக்கு பதிலாக வேறு இடம் தருவதாக இந்த வன்னியர் அறக்கட்டளையினர் கேட்டபோது நல்லாத்தூர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஆக்கிரமிப்பு செய்யாமல், அந்த இடம் தப்பியது.

இந்த ஆதாரங்களில் இருந்து பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த விளை நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுத்தான் அங்கே கல்லூரி உருவாகி இருக்கிறது. நான் அதனை தவறு என்பதற்காக இந்த ஆதாரங்களை எல்லாம் தெரிவிக்கவில்லை. ஆனால் இது போன்ற நல்ல காரியங்களுக்காகவே பல இடங்களில் நிலங்கள் வாங்கும்போது, ஒட்டுமொத்தமாக அதனை எதிர்ப்பதால் அரசின் பல்வேறு நல்ல திட்டங்களின் பலன் மக்களுக்கு கிடைக்காமல் போக நேரிடுகிறது.

விளை நிலங்களில்தான் டாக்டர் ராமதாஸ் கல்லூரி கட்டி வருகிறார் என்பதற்கான ஆதாரங்களை தர முடியுமா? என்று கேட்டார். நான் இப்போது ஆதாரங்கள் தந்துள்ளேன். தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

இது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை டாக்டர் ராமதாசுக்கே விட்டு விடுகிறேன் என தனது அறிக்கையில் ஆற்காடு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+