ஈரோடு, திருப்பூர் நகராட்சி தலைவர்கள் மேயர்களாக செயல்பட இடைக்கால தடை
சென்னை: மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஈரோடு மற்றும் திருப்பூர் நகராட்சிகளின் தலைவர்கள் மேயர்களாக செயல்படுவதற்கு வழி வகுக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஈரோடு மற்றும் திருப்பூர் நகராட்சிகள் சமீபத்தில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதுதொடர்பாக கடந்த மாதம் 17ம் தேதி தமிழக அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.
அதன்படி, நகராட்சித் தலைவர்களை மேயர்களாக செயல்பட அனுமதிக்க வழி வகுக்கப்பட்டது. இதை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தில் திருப்பூர் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளை மாநகராட்சி பிரதிநிதிகளாக மாற்ற வழி செய்யப்பட்டுள்ளது.
மறைமுகமாக கொள்ளைப்புறம் வழியாக மாநகராட்சிப் பிரதிநிதிகளாக மாற்ற இந்த புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள மக்கள் தொகை, பொருளாதார நிலை ஆகியவற்றை கணக்கில் வைத்து மாநகராட்சியாக மாற்ற முடிவெடுத்து அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
மேலும், திருப்பூர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோர் முறையே மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களாக செயல்படுவார்கள் எனவும் அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமானாகும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரண்பாடானதாகும். நகராட்சி, தரம் உயர்த்தப்படும்போது அதைக் கலைத்து விட்டு தனி அதிகாரிகளைத்தான் நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
எனவே அவசரச் சட்டத்தின் 9(9) பிரிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதேபோல ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.ஆர்.சுப்ரமணியம் என்பவரும் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த இரு மனுக்களும் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து புதன்கிழமைக்கு வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம், அதுவரை அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.