என் வளர்ச்சியை பார்த்து பயந்து மாநாடு நடத்திய திமுக-விஜயகாந்த்
சென்னை: என் வளர்ச்சியை பார்த்து பயந்து தான் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணைந்தனர். அந்த விழாவில் விஜய்காந்த் பேசுகையில்,
மக்களிடம் பிரமையை ஏற்படுத்தவும், தங்களிடம்தான் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவும் இளைஞர் மாநாடு நடத்துகின்றன. இந்த மாநாடு திமுக இளைஞர் அணி மாநாடா தமிழக அரசின் மாநாடா என்பதை மக்கள் அறிவார்கள்.
புதிதாக துவங்கிய கட்சியெல்லாம் பகுதி நேரங்களாக வந்து மறைந்து போகும் என்று கூறியுள்ளனர். அவர்கள் பேசியதை பார்த்தால் நான் வளர்ந்து வருவதைக் கண்டு பயந்து போய் மாநாட்டை நடத்தியது தெரிகிறது.
ஜாதி, மத சண்டையை வெறுப்பவன் நான். ஜாதியை பார்த்து சோறு போடுவதில்லை. ஒரே ஜாதி சங்கத்தினருக்கு எத்தனையோ தலைவர்கள். ஜாதி அமைப்புகள், பிரிவு இவை எல்லாம் தேவையற்றது என்பதால் தான் தேமுதிகவில் ஜாதி, சிறுபான்மை பிரிவு இல்லை.
ஏழ்மையை போக்குவது தான் அரசாங்கத்தின் பணி. எதையாவது சொல்லி ஓட்டுக்களை வாங்குபவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். மாபெரும் இயக்கங்களை எதிர்த்து வருகிறோம். தேமுதிகவிற்கு தான் இனி ஓட்டு என்ற மாபெரும் புரட்சியை உங்களால் தான் உருவாக்க முடியும்.
கொள்கை இல்லையென்று கூறுகின்றனர். 5 வருடத்தில் மாறிமாறி கூட்டணி அமைத்துக் கொள்வது கொள்கையா. என்னை பொறுத்தவரை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் தர வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலம் தான் வறுமையை ஒழிக்க முடியும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று யாரை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள். இலவச கலர் டிவிக்கள் விற்பனை நடப்பதாக நான் முன்பே கூறியதை கண்டு கொள்ளாதவர்கள், இன்று விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறுகின்றனர்.
50 ஆண்டு காலமாக எங்கள் கட்சி தான் பலமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் இடையிடையே காணாமல் போனார்களே ஏன். குறிப்பாக 1977 முதல் 87 வரை மக்கள் மன்றத்தில் தலை காட்ட முடியாமல் போனது ஏன். எனவே மக்கள் நினைத்தால் மாற்றம் வரும். புரட்சி மலரும்.
நீங்கள் ஒவ்வொருவரும் பிரச்சார பீரங்கிகளாக மாறி அந்த நல்ல மாற்றத்தை உருவாக்கிட வேண்டும். அந்த சக்தி உங்களிடம் இருக்கிறது. நமக்கு பக்க துணையாக ஆண்டவனும், மக்களும் இருக்கிறார்கள். மாற்றம் வந்தே தீரும். அது நம்மால்தான் முடியும் என்றார் விஜயகாந்த்.
ஆளும் கட்சியை மட்டுமே விமர்சிக்க வேண்டும்:
முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்,
ஆளுங்கட்சியை தவிர வேறு எந்த கட்சியையும் தே.மு.தி.க.வினர் விமர்சனம் செய்யக்கூடாது. கட்சிக் கூட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் கட்சித் தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு எடைக்கு எடை நாணயம் தருவது வெள்ளி தருவது போன்ற ஆடம்பரங்கள் செய்யக் கூடாது.
முடிந்தவரை ஏழைப் பெண்களுக்கு மேடையில் உதவி பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உட்கட்சி ரகசியங்களை மாற்று கட்சியினர் மற்றும் நண்பர்களிடம் வெளியிடக் கூடாது. அவ்வாறு வெளியிடும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்