தமிழக மீனவர்களுக்கு கடற்படை பாதுகாப்பு தர வேண்டும்: கருணாநிதி
சென்னை: தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு உரிய பாதுகாப்பை இந்திய கடற்படை அளிக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருணாநிதி பேசினார். முதல்வர் பேச்சில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவது அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு மட்டும் 8 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். எனவே இதைத் தடுக்கும் வகையில் கடலில் குறிப்பிட்ட இடத்தில், இந்திய கடற்படையினரின் பாதுகாப்போடு, இலங்கை கடற்படையினரின் எவ்வித குறுக்கீடும் இல்லாமல், தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படையினர் 60 சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதற்காக ஆகும் செலவை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.