பெண்ணிடமிருந்து பர்ஸைப் பறித்துச் சென்ற பருந்து
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் பெண்ணின் கையில் இருந்த பர்சை பறந்து வந்த பருந்து பறித்துச் சென்றது.
ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி முத்தம்மாள். இவர் மெயின் பஜாரில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது பறந்து வந்த பருந்து ஒன்று முத்தம்மாள் கையில் வைத்திருந்த பர்சை பறித்து சென்றது.
பர்சில் ஒரு ஜோடி கம்மலும், ரூ.1315 பணமும் இருந்தது. பறித்துச் சென்ற பர்ஸை, அந்த பருந்து காணியாளர் தெருவில் கீழே போட்டு விட்டு பறந்தது. அதை ராமசந்திரன் என்பவரது மனைவி ராஜம்மாள் எடுத்தார்.
பின்னர் அதில் இருந்த வங்கி கடன் அட்டையில் உள்ள முகவரியை பார்த்து பர்சை முத்தம்மாவிடம் ஓப்படைத்தார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடிகை நமீதாவின் செல்போனை காகம் ஒன்று கவ்விக் கொண்டு பறந்தது நினைவிருக்கலாம். ஆனால் அந்த செல்போன் கடைசி வரை கிடைக்கவே இல்லை.