சவேரா ஹோட்டல் விபத்து: பலி 3 ஆனது-ஹோட்டல் அதிபர் கைது
சென்னை: சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நீச்சல்குளத்தின் மீது போடப்பட்ட மேடை சரிந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இன்று ஆனந்த் என்ற தகவல் தொழில்நுட்பவியல் மாணவரும், தன்யா என்ற இளம்பெண்ணும் உயிரிழந்துவிட்டனர்.
டிசம்பர் 31ம் தேதி இரவு மயிஸலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டல் வளாகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடந்தன. இதற்காக நீச்சல் குளத்தின் மீது சாதாரண கட்டைகளால் மேடை அமைக்கப்பட்டு அதில் டான்ஸ் பார்ட்டி நடந்தது.
அப்போது திடீரென மேடை சரிந்ததில், பலர் நீச்சல் குளத்தில் விழுந்தனர். இதில் நீரில் மூழ்கி உ.பியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் சுனில் அக்னிஹோத்ரி பலியானார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் மேலாளர் மைக்கல் அந்தோணி, மேடை அமைக்கும் காண்டிராக்டை பெற்ற நரேந்திர சிங்கின் மேலாளர் ரவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நரேந்திர சிங் மற்றும் ஹோட்டர் பார் பொறுப்பாளர் சம்பத் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஹோட்டல் அதிபர் பி.வி.ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரெட்டி ஜாமீனில் விடுதலையாகி விட்டார்.
மேலும் இருவர் சாவு:
இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் மாணவர் ஆனந்த் (21) இன்று மாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல் ஆனந்தின் ஒன்று விட்ட சகோதரி தன்யாவும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரெட்டி கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஆனந்த்தின் உயிர் போனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications