டெல்லியில் 3 விடுதலைப் புலிகள் கைது!
டெல்லி: டெல்லியில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்பாணத்தைச் சேர்ந்த இவர்களுடன் சென்னையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரைம் பிராஞ்ச் போலீசார் தந்த தகவலின் அடிப்படையில் மத்திய டெல்லியின் பஹார் கஞ்ச் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களது விவரம்
பிரான்சிஸ் ஜான்சன் (வயது 29), ஜான்மேரி அகாஸ்ஹிடன் (22), திசை வீரசிங்கம் ரஞ்சித் (28). இந்த மூவருமே யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர அய்யா கண்ணு என்ற சென்னையைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் இதுவரை அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும், இலங்கை அரசின் உதவியோடு இவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதான நால்வரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலி பாஸ்போர்ட் மூலம் இவர்கள் டெல்லியில் இருந்து பிரான்சுக்கு செல்ல முயன்றதாகவும், இவர்கள் சர்வதேச அளவில் தேடப்படுபவர்களா என்பதை அறிய இன்டர்போல் உதவியை நாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன