கடால்பி-இன்டர்போல் உதவியை நாடும் தமிழக போலீஸ்
சென்னை: தமிழகத்தில் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலிகளைப் பிடிக்கவும், அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி வருவதை தடுக்கவும் இன்டர்போலின் உதவியை தமிழக போலீசார் நாடியுள்ளனர்.
சென்னை மேடவாக்கத்தில் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவை சேர்ந்த நாதன் என்ற தம்பித்துரை பரமேஸ்வரனை(32) கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவிய மேலும் 7 இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது வீட்டில் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பால்ரஸ்களும் ைகப்பற்றப்பட்டன.
நாதன் தங்கியிருந்த வீட்டை உதவி கமிஷனர் சங்கர பாண்டியன் தலைமையிலாந போலீஸ் படை சோதனையிட்டது. மேலும் அண்டை வீட்டினரிடமும் விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி சென்னை வந்த நாதன், ஏப்ரல் 20ம் தேதி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னை அகதியாக பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த எட்வின் கமலநாதன் என்ற பெயரில் ஒரு பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார்.
இந் நிலையில் மதுரை மத்திய சிறையில் 97ம் ஆண்டு அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலியான கருப்பையா ஜாமீனில் வெளியில் வந்து தலைமறைவானார். பின்னர் கடால்பி என்று பெயரை மாற்றிக் கொண்டு வெளியில் சுற்றி வந்துள்ளார். இதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
இவர் தான் தமிழகத்தில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டித் தரும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் என க்யூ பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடால்பியைப் பிடித்தால் தான் தமிழகத்தில் புலிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என போலீசார் கருதுகின்றனர்.
இதையடுத்து கடால்பியை பிடிக்க இன்டர்போல் உதவியை தமிழக போலீசார் நாடியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இன்டர்போலுக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாதனிடம் கியூ பிரிவு போலீஸ் எஸ்பி அசோக்குமார், கூடுதல் எஸ்பி சுப்பிரமணியம், துணை எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.