தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது-ஆளுநர்
சென்னை: தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக சட்டப் பேரவையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்தார்.
இன்று தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து அவர் உரையாற்றுகையில்,
தீவிரவாதிகளுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து கடும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தீவிரவாதத்தைப் பரப்பும் செயல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. அதே போல கூலிப் படைகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமச்சீரான வளர்ச்சியும், வறுமையை ஒழிப்பதுமே தீவிரவாத செயல்களை (நக்ஸல்கள்) கட்டுப்படுத்தவும் சாதிக் கலவரங்களைத் தடுக்கவும் ஒரே வழி என்பதை அரசு உணர்ந்துள்ளது.
மேலும் 95 சமத்துவபுரங்கள்:
தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியாரின் 95 அடி உயரமுள்ள சிலைகள் நிறுவப்படும். இது தொடர்பாக தி.க. தலைவர் கி.வீரமணியின் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தவிர மேலும் 95 புதிய சமத்துவபுரங்களும் உருவாக்கப்படும். பெரியாரின் சிந்தனைகளை மேலும் ஆழமாகப் பரப்ப இந்த சமத்துவபுரங்கள் உதவும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள சமத்துவபுரங்களின் எண்ணிக்கை 240 ஆக உயரும்.
எண்ணூரில் துறைமுகம்:
சென்னையின் எண்ணூர் பகுதியில் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ரூ. 3,068 கோடி செலவில் புதிய துறைமுகத்தை உருவாக்கவுள்ளது. இதன்மூலம் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
இது தவிர கூடலூரிலும் ஒரு துறைமுகத்தை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருகின்றன.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் பர்னாலா.