பிணத்தை புதைப்பதில் ஜாதி சண்டை!
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே சுடுகாட்டில் ஒரு ஜாதியைச் சேர்ந்தவரின் பிணத்தை புதைக்க இன்னொரு ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் நகரசபைக்குட்பட்ட புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கோமதியம்மாள் நேற்று மரணம் அடைந்தார். இதையடுத்து கடையநல்லூரை அடுத்த செண்பகநல்லூரில் மற்றொரு பிரிவினருக்கு சொந்தமான சுடுகாட்டில் அவரது பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு இன்னொரு ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. தங்கள் இனத்தவரின் சுடுகாட்டில் கோமதியம்மாளின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அந்த பிரிவைச் சேர்ந்த நாட்டாமை புஷ்பராஜ் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் கோமதியம்மாளின் உடலை போகநல்லூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications