அமிதாப்புக்கு பால் தாக்கரே ஆதரவு
மும்பை: அமிதாப் பச்சன் வீடு மீது தாக்குதல் நடத்தியதும், அவருக்கு எதிராக பேசுவதும் முட்டாள்தனமானது என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
பால் தாக்கரேவின் மருமகனும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனை கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே, அமிதாப் பச்சன் சொந்த மாநிலமான உ.பி. மீதுதான் அதிக பாசத்துடன் உள்ளார். மகாராஷ்டிரா மீது அவருக்கு சற்றும் அக்கறை இல்லை என்று விமர்சித்திருந்தார்.
மேலும் மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களையும் அவர் கடுமையாக எச்சரித்திருந்தார். இதையடுத்து ராஜ் தாக்கரே கட்சியினர் மும்பை, நாசிக், தானே நகரங்களில் கலவரத்தில் இறங்கினர். வட இந்தியர்களைக் குறி வைத்து தாக்கினர். அமிதாப் பச்சன் வீட்டின் மீதும் சோடா பாட்டில்கள் வீசப்பட்டன.
ராஜ் தாக்கரேவின் இந்த செயலுக்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் முதல் முறையாக ராஜ் தாக்கரே பேச்சு குறித்து பால் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமிதாப் பச்சன் மீதான குற்றச்சாட்டுக்கள் முட்டாள்தனமானது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர் எனக்கு 40 ஆண்டு காலமாக நண்பர். அவரது வீட்டைத் தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
அமிதாப் பச்சன் அமிதாப் பச்சன்தான். அவர் இதுபோன்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டுக்களை கண்டு வேதனைப்படக் கூடாது. புறக்கணித்து விட வேண்டும்.
அமிதாப் பச்சன் உலக சூப்பர் ஸ்டார். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் மதிக்கப்படும் பெரிய மனிதர். மும்பை மீதும், மும்பை மக்கள் மீதும் அவர் எப்போதும் தனிப்பாசத்துடன்தான் இருந்து வருகிறார். அதில் அவர் தவறியதில்லை. தனக்குப் புகழைத் தேடிக் கொடுத்த மும்பை மக்களை அவர் ஒருபோதும் மறந்ததில்லை என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
இதற்கிடையே, ராஜ் தாக்கரே கட்சியினர் கடந்த சில நாட்களாக நடத்தி வந்த வன்முறைச் செயல்கள் சற்று ஓய்ந்துள்ளன. நேற்று எந்த இடத்திலும் பெரிய அளவில் பிரச்சினை எழவில்லை.
இந்த நிலையில் ராஜ் தாக்கரே கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டபோது அவர்களைத் தடுக்காமலும், கைது செய்யாமலும் இருந்ததாக 2 இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications