வக்கீலை தாக்கியதை கண்டித்து கரூர் வக்கீல்கள் உண்ணாவிரதம்
கரூர்: கரூர் காவல் நிலையத்தில் வக்கீல் கரிகாலன் என்பவரை தாக்கிய கரூர் நகர இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூரில் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் வக்கீலாக இருபவர் கரிகாலன். இவரது நண்பர் மெட்ரோ பிரபு. இவர் அதிமுகவில் முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளராக பதவி வகித்தவர்.
மெட்ரோ பிரபு போன் கடையில் சில தினங்களுக்கு முன்பு ரூ. 3000 மதிப்புள்ள செல் போன் சார்ஜ் கூப்பன்கள் மற்றும் பணம் ரூ 2000 ஆகியவை காணாமல் போனது.
இது சம்பந்தமாக புகார் கொடுக்க வக்கீல் கரிகாலனும், மெட்ரோ பிரபுவும் கரூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது, இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பனிடம் புகார் மனுவை கொடுக்க முயன்ற போது வக்கீல் கரிகாலனை இன்ஸ்பெக்டர் முத்துகருப்பன் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கரிகாலனை, முத்துக்கருப்பன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தினர். எஸ்.பி. சண்முகவேலிடம், இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டது.
மேலும் நீதிமன்றப் புறக்கணிப்பு முடிவும் எடுக்கப்பட்டு அதன்படி நீதிமன்றப் புறக்கணிப்பை வக்கீல்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்று கரூர் தாலுகா அலுலகம் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் முருகையன் தலைமை வகித்தார். கரூர், குளித்தலையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.