பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியர் மீது கலெக்டரிடம் மாணவன் புகார்
அரூர்: அரூர் அருகே தன்னை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியர் மீது மாவட்ட கலெக்டரிடம் மாணவன் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாறையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். விவசாயம் செய்துவரும் இவருக்கு கவுதம் (15) என்ற மகன் இருக்கிறார். இவர் நம்பிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
கவுதம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவகத்துக்கு தனது தாய் கண்ணகி மற்றும் உறவினருடன் வந்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
அதில், கடந்த 9ம் தேதி (சனிக்கிழமை) மதியம் உணவு
இடைவேளையின்போது நானும், எனது நண்பனும் வகுப்பறையில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது ஜன்னலில் இருந்த கம்பி ஒன்று உடைந்து விழுந்து விட்டது. அந்த கம்பியை நான் தான் உடைத்துவிட்டேன் எனக்கூறி பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் வேலவன் என்னை மூங்கில் பிரம்பால் உடல் முழுவதும் சரமாரியாக அடித்தார்.
வலி தாங்க முடியாமல் ஓடிய என்னை ஓட ஓட விரட்டி அடித்தார். மேலும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பள்ளி அலுவலக அறை முன்பு முட்டி போட வைத்து இரவு 7-45 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இங்கு நடந்த சம்பவங்கள் பற்றி யாரிடமாவது கூறினால் டிசியை கொடுத்து
அனுப்பி விடுவோம் என்றும், மதிப்பெண்களையும் குறைத்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.
நான் நடந்த விவரங்களை எனது பெற்றோரிடம் கூறி அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
எந்த தவறும் செய்யாத நிலையில் என்னை அடித்து உதைத்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளேன். எனது எதிர்கால கல்வியும் பாதிக்கப்படும் என்ற பயமும் உள்ளது. எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
புகார் கொடுக்க வந்த மாணவன் கலெக்டரிடம் உடம்பில் ஏற்பட்ட காயத் தழும்புகளை காண்பித்தார்.












Click it and Unblock the Notifications