ஆதாம் பாலம் வழியாகவே சேது கால்வாய்- நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய பதில் மனு
டெல்லி: ஆதாம் பாலம் வழியாகவே சேது சமுத்திரத் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து இந்துதுவா அமைப்புகள் தாக்கல் செய்த வழக்குகளால் இத் திட்டத்துக்கு இடைக்கால தடை ஏற்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பதில் மனுவை தாக்கல் செய்தது.
அதில்,
இத் திட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். மத நம்பிக்கையின் அடிப்படையில் அரசு தனது கொள்கைகளை நிர்ணயிக்க முடியாது.
சேது கால்வாயை அமைக்க ஆதாம் பாலம் வழியாக (ராமர் பாலம்) இப்போது திட்டமிடப்பட்டுள்ள பாதை தான் மிகவும் சிறப்பான, சரியான, சாத்தியமான பாதையாகும்.
இதன் மூலம் மட்டுமே சுனாமியால் இந்தக் கால்வாய்க்கு பாதிப்பு ஏற்படுவைத் தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு சர்ச்சைக்குரிய பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், ராமர் இருந்தார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்று கூறப்பட்டிருந்ததால் நாடு முழுவதும் பாஜக தலைமையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.
இதையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்ற மத்திய அரசு இன்று புதிய மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவைத் தயாரிக்கவும் மத்திய அரசு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அளி்க்க வேண்டிய பதில் தொடர்பாக திமுகவுக்கும் சில காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேசியதையடுத்து ஒரு வழியாக பதில் மனு இறுதி செய்யப்பட்டது.