ரயிலில் பிறந்து, விழுந்து, பிழைத்த சிசு
அகமதாபாத்: கர்ப்பிணிப் பெண் ரயிலின் கழிப்பறைக்குப் போனபோது அவருக்குப் பிரசவம் ஏற்பட்டது. பிறந்த குழந்தை, ரயில் கழிப்பறை துவாரம் வழியாக கீழே விழுந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை எந்தக் காயமும் இல்லாமல் உயிர் பிழைத்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.
சற்றும் நம்பவே முடியாத சம்பவமாக இது இருந்தாலும் குஜராத்தில் இந்த அதிசயச் சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூரி பென் (33). இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அகமதாபாத் செல்ல, ஜோத்பூர் - அகமதாபாத் ரயிலில் பயணித்தார்.
அப்போது சிறுநீர் கழிப்பதற்காக அவர் ரயிலில் உள்ள கழிப்பறைக்குச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து குழந்தையும் பிறந்தது.
ஆனால் பெரும் அதிர்ச்சியாக, அந்தக் குழந்தை கழிப்பறை துவாரம் வழியாக கீழே விழுந்து விட்டது. இதனால் பூரி பென் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.
உடனடியாக அருகில் உள்ள அம்ப்லிசயான் ரயில் நிலையத்துக்குத் தகவல் தரப்பட்டது. அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து ரயில் தண்டவாளத்தில் தேடிப் பார்த்தனர். அப்போது பூரிபென்னுக்குப் பிறந்த பெண் குழந்தை லேசான சிராய்ப்பைத் தவிர எந்தவித காயமும் இல்லாமல் கிடந்ததைப் பார்த்து அதிசயித்துப் போயினர்.
உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையின் எடையைப் பரிசோதித்தபோது 1.4 கிலோவாக இருந்தது. குறைப் பிரசவம் என்பதால் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு குழந்தை உட்படுத்தப்பட்டது. இதில் குழந்தை நல்ல நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்போது இந்த அதிசயக் குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.
ஓடும் ரயிலில் பிறந்து, கழிப்பறை வழியாக விழுந்தும், பெரிய காயம் இல்லாமல் பிழைத்துள்ள இந்தக் குழந்தையை கடவுளின் குழந்தை என மருத்துவமனை டாக்டர்கள் வியப்புடன் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications