அணுசக்தி ஒப்பந்தம்- மத்திய அரசு மீது இடதுசாரிகள் பாய்ச்சல்
டெல்லி: அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசை இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவின் நெருக்கடிக்கு அடிபணிந்து ஒப்பந்தத்தை நிறைவேற்ற நினைத்தால் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்று இடதுசாரி கட்சித் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகனும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும், ஒப்பந்தம் தயாராகிவிட்டதாகவும் அதுபற்றி இடதுசாரிகள் கருத்து சொல்லலாம் என்றும் முகர்ஜி கூறியிருந்தார். இது இடதுசாரி கட்சித் தலைவர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
அமெரிக்காவையும், சில வெளிநாட்டுவாழ் இந்தியர்களையும், பா.ஜ. தலைவர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே மத்திய அரசு செயல்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் முறையாக விவாதித்தபிறகுதான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலை தெளிவாகும்.
அதற்குள்ளாக, ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அநாவசியமான ஆர்வம்காட்டி முந்திரிக்கொட்டைத்தனமாக மத்திய அரசு செயல்படக்கூடாது என்று இடதுசாரி கட்சித்தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.