இலங்கை கடத்திய 47 கன்னியாகுமரி மீனவர்கள் விடுதலை
சென்னை: இலங்கை கடற்படை கடத்திச் சென்ற 62 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில் 47 பேரை அந்த நாடு விடுவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களில் 47 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், சின்னத்துறை கிராமங்களைச் சேர்ந்த 62 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று விட்டது. அவர்களை தற்போது புத்தளம் தீவில் உள்ள சிறையில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசைக் கண்டிக்கவும் அவர் கோரியிருந்தார். இந்தப் பின்னணியில், 47 மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் மற்ற மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை அரசு வாய் திறக்கவில்லை.