பட்ஜெட்: வெறும் வர்ணஜாலம்-ராமதாஸ்
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவதற்கும், இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவித்திருக்கும் சலுகைகள் பாராட்டுக்குரியது. ஆனால் முந்தை ஆண்டுகளை விட அரசின் மொத்த வரி வருவாயில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மது விலக்கை அமல்படுத்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம், கூட்டுறவுக் கடனுக்கான வட்டிக் குறைப்பு, புதிய பயிர்க் கடன், விவசாயிகள் சுய உதவிக் குழுக்கள் போன்றவை மகிழ்ச்சி அளிக்கின்றன.
ஆனால் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை இன்னும் அழுத்தமாக எடுத்துரைத்திருக்கலாம். அரசு கேபிள் டிவி குறித்தும் மேலோட்டமாகவே இடம் பெற்றிருககிறது.
இரவு நேரத்தில் வானத்தில் மின்னுகின்ற, வாண வேடிக்கைகளின் வர்ண ஜாலமாக இல்லாமல், நிரந்தர ஒளிவிளக்காக நிதி நிலை அறிக்கை அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
ஜி.கே.மணி, தலைவர், பாமக:
தமிழக அரசின் பட்ஜெட்டில், பாமகவின் நிழல் பட்ஜெட்டின் நிழல் படிந்துள்ளது. பட்ஜெட்டில் பல அம்சங்கள் வரவேற்புக்குரியதாக உள்ளது. பாராட்டுக்குரியதாக உள்ளது.
இருப்பினும், மது ஒழிப்பை படிப்படியாக அமல்படுத்த முன்வராதது, மேட்டூரிலிருந்து வெளியேறும் உபரி நீரை பயன்படுத்த முன்வராதது, வேளாண்மைத் துறைக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்காதது, கல்விக் கட்டணத்தில் நடக்கும் கொள்ளையைத் தடுக்க திட்டமிடாதது, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் தீட்டப்படாதது, மூடப்பட்ட 9 ஆயிரம் சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளை திறக்க முன்வராதது உள்ளிட்ட பாமக தெரிவித்துள்ள பல திட்டங்களை பட்ஜெட்டில் சேர்க்காதது ஏமாற்றமாக உள்ளது.