For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் பதவிக்கு அலையவில்லை-அத்வானி

By Staff
Google Oneindia Tamil News

Advani
டெல்லி: 2004ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி லோக்சபா தேர்தலில் படு தோல்வி அடைந்த பின்னர் வெங்கையா நாயுடுவிடமிருந்து தலைவர் பதவியைப் பெற நான் ஆர்வம் காட்டவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

மை கன்ட்ரி மை லைப் என்ற பெயரில் அத்வானி எழுதியுள்ள நூலில் இதைத் தெரிவித்துள்ளார் அத்வானி.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ..

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெற்ற தோல்விக்கு யாரும் தனிப்பட்ட காரணம் அல்ல. அனைவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தனிப்பட்ட யாரையும் இதில் குற்றம் சாட்ட முடியாது.

தோல்விக்கு யாரையும் தனித்து குற்றம் சாட்டும் பண்பாடு பாஜகவுக்கு கிடையாது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அதுதான் பண்பாடு. 1998ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றபோது அதற்கு நரசிம்மராவையும், 1999ம் ஆண்டு கிடைத்த தோல்விக்கு சீதாராம் கேசரியையும் குற்றம் சாட்டினர். இருவரும் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் 2004ம் ஆண்டு நடந்த தேர்தல் தோல்விக்கு அப்போது பாஜக தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவை பலிகடாவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வெங்கையா நாயுடுவே, தானாக முன்வந்து தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதுதான் பாஜகவின் பண்பாடு.

அப்போது வெங்கையாவுக்கு அடுத்து தலைவர் பதவியில் அமர நான் ஆசைப்படவில்லை. இரண்டாம் நிலை தலைவர்கள் யாராவது கட்சித் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என அனைவரும் முயன்றோம். ஆனால் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, பிரமோத் மகாஜன், நரேந்திர மோடி என சிலரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் தலைமைப் பொறுப்புக்கு அவர்கள் அப்போது தயார் நிலையில் இல்லை என்ற கருத்து எழுந்தது.

இளம் தலைவர்களை கட்சியை வழி நடத்திச் செல்ல பயிற்றுவிக்க வேண்டும் என்று நான்தான் யோசனை தெரிவித்தேன். எனக்கு மீண்டும் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசை ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் அந்த சமயத்தில் மூத்த தலைவர் ஒருவர்தான் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று கட்சியில் அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்ததாலும், அடல் பிகாரி வாஜ்பாய் வலியுறுத்திக் கூறியதாலும், நான் எனது கொள்கையை விட்டு விட்டு கட்சித் தலைவராக தீர்மானித்தேன். அப்படித்தான் நான் பாஜகவில் ஐந்தாவது முறையாக கட்சித் தலைவர் பதவிக்கு வந்தேன்.

கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சில தளர்ச்சிகள் ஏற்பட்டதுண்டு. அதை நான் மறுக்கவில்லை. கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சிலர் வெளிப்படையாக பொதுவில் கொண்டு வந்ததுண்டு. பத்திரிக்கைகளை தங்களது குறை கூறும் ஊடகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவையெல்லாம் கோஷ்டி மோதல்களோ அல்லது வேறு மோதல்களோ இல்லை. சாதாரண கொள்கை மோதல்கள், முரண்பாடுகள்தான்.

ஆனால் இந்த கருத்து மோதல்கள் வெளிப்படையாக கிளம்பியதால் கோஷ்டி மனப்பான்மையும், குழு செயல்பாடுகளும் வெளிக் கிளம்பின. இது கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய கட்சி பாஜக என்பதில் நான் பெருமைப்பட்ட நிலையில் சில மீடியாக்கள், வேறுபாடுகளுடன் கூடிய கட்சி பாஜக என்று செய்தி வெளியிட்டது எனக்கு அதிக வேதனையைத் தந்தது என்று கூறியுள்ளார் அத்வானி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X