For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை: மக்களுக்கு உதவிகள் செய்ய கட்சிகள் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளையும், மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுமாறு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளன.

காலம் தப்பி பெய்து வரும் கன மழையால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு ரூ. 100 கோடி நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கு வசதியாக 2 நாட்களுக்கு சட்டசபைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கட்சித் தொண்டர்கள்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பல்லாயிரக்ணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் நீரில் மூழ்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

உப்பளங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால், உப்பு உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்து பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் தங்களால் இயன்ற அளவு மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும்.

மக்கள் நலப் பணிகளில் அதிமுகவினர் ஈடுபடுவதற்கு வசதியாக 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறவிருந்த அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைக்கும் பணிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்ட பின்னரே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையும் என்கிற பழைய காலத்து நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

புயல், மழை, வெள்ளம் முதலான இயற்கைப் பேரழிவுகளால் மக்கள் பாதிக்கப்படுகிறபோது அவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிடவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வசதியாக மாநில அளவில் ஒரு மறு வாழ்வு ஆணையத்தை ஏற்படுத்திட வேண்டும்.

கோட்டையிலிருந்து ஆணை வர வேண்டும் என்று காத்திருக்காமல், இந்த மறு வாழ்வு ஆணையமே உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இந்த நிறுவனத்திற்கு என்று எதிர்பாரா செலவு நிதியினை ஆண்டுதோறும் அரசு ஒதுக்கித் தர வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிள் குறித்து அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் என்ற நிவாரண நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரம் நிதி தர வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் தேவைகள் குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிவாரண உதவிகள் உடனடியாக கிடைத்திட பாமகவினர் உதவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

சரத்குமார்:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ. 4000 என்பது மிகவும் குறைவு. விவசாயத்திற்கான செலவைக் கணக்கிட்டு உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும்.

அதேபோல உப்பளங்களின் பாதிப்புகளுக்கும், மீனவர்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.

அரசு நிர்வாக இயந்திரத்துடன் அனைத்துக் கட்சித் தோழர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து இணைந்து, மக்களின் துயரைப் போக்க பாடுபட வேண்டும.

சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கச் செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X