திருப்பரங்குன்றம்-அழகர்கோவிலி்ல் ரோப்கார் அமைக்க திட்டம்
மதுரை: மதுரையில் உள்ள முருகப் பெருமானின் அறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம் மற்றும் அழகர்கோவில் பழமுதிர்சோலையில் ரோப் கார் வசதி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், அழகர்கோயில் ஆகிய இரு இடங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சாலைகளைச் சீரமைக்கவும், மின்விளக்கு வசதியை மேம்படுத்தவும் பயணிகளுக்கான தங்கும் அறைகள் அமைக்கவும் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் தமிழக சுற்றுலாத்துறை திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
இந் நிலையில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதி கருதி திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து மலையின் மேல் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் வரை ரோப்கார் (இழுவை ரெயில்) அமைப்பதற்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அதே போல அழகர்கோயில் மலை அடிவாரத்திலிருந்து நூபுரங்கை தீர்த்தக் கிணறு அமைந்துள்ள இடம் வரை ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள சமணர் குகைகளை சுற்றுலா மையங்களாக அறிவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.