26ம் தேதி அத்வானி நாகர்கோவில் வருகை
சென்னை: பாஜக தலைவர் அத்வானி வரும் 26ம் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் அக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
நாடு முழுவதும் தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர் பிரசார கூட்டங்கள் நடந்து வருகின்றன.
எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி பிரசார பயணமாக வரும் 26ம் தேதி தமிழகம் வருகிறார்.
மாநில துணை தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சியில் இருந்து கன்னியாகுமரிவரை பிரசார யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். யாத்திரை 26ம் தேதி நாகர்கோவிலில் நிறைவடைகிறது. இதையொட்டி நாகர்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அத்வானி பேசுகிறார்.
நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. எதிர்க்க வேண்டிய கட்சிகள் எல்லாம் ஒவ்வொரு கூட்டணிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதால் கூட்டணி நலன் கருதி மக்கள் பிரச்சினைகளை கைவிட்டு விட்டன.
கம்யூனிஸ்டு கட்சிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான பதவி பலன்களை கடைசி காலம் வரை அனுபவித்து விட்டன. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 3வது அணி என்று நாடகமாடி ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரசுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளன. எத்தனை நாள்தான் மக்கள் இந்த நாடகத்தை ரசிப்பார்கள்.
பட்ஜெட்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அதிக அளவு பணவீக்கத்தையும், கடுமையான விலைவாசி ஏற்றத்தையும் கட்டுப்படுத்த திறமையற்ற மத்திய அரசை கண்டிக்கிறோம்.
விவசாயிகளுக்கு பயன்படும் கிராம வங்கிகளை ஒரு புறம் மூடுகிறார்கள். இன்னொரு புறம் வகுப்புவாத அடிப்படையில் வங்கிகளை துவக்குவதை கண்டிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications