கர்நாடக திரைத் துறையினர் சஸ்பெண்ட்- தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அதிரடி
சென்னை: கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை ஓய்ந்து சகஜ நிலை திரும்பும் வரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இடம் பெற்றுள்ள கர்நாடக திரையுலக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கே.ஆர்.ஜி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காவிரி தொடர்பான பிரச்சினை தலையெடுக்கும்போதெல்லாம் கன்னட ஆதரவாளர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் தமிழர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் எதிராக வன்முறையில் இறங்குவது வழக்கமாகி விட்டது.
இது முட்டாள்தனமானது, கேலிக்கூத்தானது. இந்த அர்த்தமில்லாத போராட்டத்திற்கு திரைப்பட வர்த்தக சபை தனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. அதன் ஒரு முகமாக, திரைப்பட வர்த்தக சபையில் இடம் பெற்றுள்ள, கர்நாடகத் திரையுலகைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளோம்.
இது எனது தனிப்பட்ட முடிவல்ல. கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநில உறுப்பினர்களும் இணைந்து எடுத்த ஒருமித்த முடிவாகும்.
கர்நாடகத்தில் நிலைமை சகஜமாகாவிட்டால் கன்னடத் திரையுலகினர் நிரந்தரமாக சபையிலிருந்து தூக்கி எறிவோம்.
அவர்களது உதவியோ, ஒத்துழைப்போ எங்களுக்குத் தேவையில்லை. அவர்களை நம்பி நாங்கள் இல்லை. அவர்களுக்குத்தான் நாம் வேண்டும். கன்னடர்கள் இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
தமிழர்கள் அமைதியான முறையில் கர்நாடகத்தில் வாழ அவர்கள் வழி செய்ய வேண்டும் என்றார் கேஆர்.ஜி.
தென்னிந்தி திரைப்பட வர்த்தக சபையில் கர்நாடகத்தைச் சேர்ந்த 127 முழு நேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது அத்தனை பேரும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.